சசிகலா முதல்வராக பதவியேற்பாரா? பொன்னையன் புதிர் பேட்டி!
சசிகலா முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்து 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியிருந்த நிலையில், தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் சசிகலா முதல்வராகப் பதவியேற்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசியல் சூழல் தொடர்ந்து குழப்பமாக உள்ளது. நேற்று மாலை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பன்னீர் செல்வம், தர்மம் வெல்லும் என்று கூறி விட்டுச் சென்றார். ஆனால் சசிகலா செய்தியாளர்களைச் சந்திக்காமல் போய் விட்டார்.
இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர ராவ் குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்திற்கு திடீரென அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த பின்னணியில் சசிகலா தரப்பில் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு அருகே செய்தியாளர்களைச் சந்தித்தார் பொன்னையன். அப்போது அவர் கூறுகையில், நேற்று இரவு ஏழரை மணியளவில் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சசிகலா. அவர் எப்போது பதவியேற்பார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது. இன்னும் 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் என்று குறிப்பிட்ட நிலையில் தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
பொன்னையன் கூறுவதைப் பார்த்தால் ஆளுநர் தரப்பிலிருந்து சசிகலாவுக்கு சாதகமாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிகிறது.