தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை - புயலுக்கு வாய்ப்பு இல்லையாம்
சென்னை: தமிழகத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்கிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான வார்தா புயல் சென்னையில் கரையை கடந்தது. இதனால் சென்னையில் கடுமையான சேதம் ஏற்பட்டது. பெரும் சேதத்தை உருவாக்கிய வார்தா புயல், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டது. இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.
இது நகர்ந்து வருவதை பொறுத்து மழை இருக்கும். அனேகமாக 20, 21ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிகிறது. ஆனால் புயல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மக்கள் பயப்பட தேவையில்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார். தென்கிழக்கு கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்கிறது எனவும் வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் வலுப்பெற்ற வர்தா புயல் 12ம் தேதி சென்னையை நேரடியாக தாக்கியது. இதன் மூலம் சென்னையில் 119 மிமீ மழை பெய்தது. புயல் கரையை கடந்த பின்பு மழை நீடிக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாக பெய்துள்ளது.
இந்த பருவ மழை காலத்தில் சராசரியாக 877 மிமீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் சென்னையில் இதுவரை 403 மிமீ தான் மழை பெய்துள்ளது. இது 54 சதவீதம் குறைவு. பருவமழை காலம் முடிவடைய இன்னும் நாட்கள் உள்ளன. இதனால் மேலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக தற்போது அந்தமான் அருகே வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும்பட்சத்தில் அது தமிழகத்தை தாக்கலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில மழை பெய்து வருகிறது. தற்போது அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புயலாக உருவெடுத்தால், கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் வானிலையை கூர்ந்து நோக்கும் ஆய்வாளர்கள், சென்னையில் இந்த வாரம் புயல் தாக்க வாய்ப்பு இல்லை என்றே பதிவிட்டுள்ளனர்.