ஜிங்கு… ஜிங்குன்னு கேரள ஜால்ரா அடிக்கிறாங்க... விஜயகாந்த் கிண்டல்
தர்மபுரி: காவல்துறையினர், ஆளும்கட்சி என்றால் அம்மா என்று ஒரு சல்யூட் அடிக்கிறாங்க. ஏன் இந்த கேரளா ஜால்ரா அடிக்கிறீங்க என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் கூறியதாவது:
குடிநீர் பிரச்சினை
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நாங்கள் சொல்கிறோம் நாங்கள் வெற்றிபெற்றால் மின்சாரம், குடிநீர் பிரச்சனையை முதலில் தீர்ப்போம். தருமபுரியில் 5 மேம்பாலங்கள் கட்டினால் நல்லா இருக்கும் என்று சொன்னார்கள். அதற்கும் நாங்கள் முயற்சி எடுப்போம்.
சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை
கலைஞர் கட்டினார் என்பதற்காக புதிய சட்டமன்றத்தை மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. அதேபோல் சேலத்தில் அன்புமணி ராமதாஸ் முயற்சியால் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வந்தது. அன்புமணி ராமதாசுக்கு பெயர் வந்துவிடுமோ என்பதற்காக டாக்டர்கள், நர்சுகள் இல்லை என்கிறார்.
வேலை கொடுக்கலாமே
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கில் பதிவு செய்து வைத்துள்ளார்கள் இளைஞர்கள். அவர்களில் ஒரு 50 அல்லது 100 பேரை வேலைக்கு எடுத்து இருந்தால் அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சிறப்பாக நடத்தலாமே. மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது சரியல்ல.
சதியா? விதியா?
ஜெயலலிதா புதுசா ஒரு கதையை விட்டிருக்கிறார். என்ன கதை தெரியுமா. தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுவதில் சதி நடக்கிறது. மின்சார துறையில் வேலைபார்ப்பவர்களை சொல்கிறார். 2011 தேர்தலில் வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் இருக்கும் இங்கு இருக்காது என்றார்கள். 2012, 2013, 2014 ஜீன் வரப்போகிறது இன்னும் மின்வெட்டு பிரச்சனை தீரவில்லை.
வெளியே வந்துதான் ஆகணும்
சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும்தான் ஜெயலலிதா வெளியே வருவார் என்று அன்புமணி ராமதாஸ் சொன்னார். நான் சொல்கிறேன். வாய்தா வாங்கிக்கொண்டிருக்கும் வழக்குக்கு அவர் என்றைக்காக இருந்தாலும் வெளியே வந்தாக வேண்டும்.
போலீஸ் வீட்டில் திருட்டு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம் நடக்கிறது. அதிகமாக எங்கே திருடு போகிறது என்றால் போலீஸ்காரர்கள் வீடுகளில்தான் திருடுபோகிறது. ஏன் சொல்லுங்கள் பார்ப்போம். எல்லாமே லஞ்சப் பணம். ஊழல் பணம். இந்தப் பக்கம் 10 ரூபா, இந்தப் பக்கம் 15 ரூபான்னு வாங்கி பையில வைக்கிறாங்க. கணக்கு இல்லாம வாங்கி வைக்கிறாங்க. அதனாலதான் போலீஸ்காரர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கிறாங்க.
கேரளா ஜால்ரா
போலீஸ்காரர்களை நான் குறை சொல்லவில்லை. அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா அதற்காக கேரள ஜால்ரா அடிக்காதீங்க... ஜிங்கு... ஜிங்குன்னு... சும்மா, ஜிங் ஜிங் ஜிங் என்று அடிங்க. வேணா என்று சொல்லவில்லை. ஆனா கேரளா ஜால்ரா அடிக்காதீங்க. ஆளும்கட்சி என்றால் அம்மா என்று ஒரு சல்யூட் அடிக்கிறாங்க. ஏன் இந்த கேரளா ஜால்ரா அடிக்கிறீங்க.
அன்புமணி வெற்றி உறுதி
அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்று விடுவார் என்பது இந்த கூட்டத்தை பார்த்தவுடன் உறுதியாகிவிட்டது. அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.