பட்டாசு விபத்துக்களைத் தடுக்க... தீபாவளியன்று ‘தீ’யாய் வேலை செய்ய தீயணைப்புத் துறை முடிவு
சென்னை: தீபாவளிக்கு சரியாக ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், மக்கள் விபத்துக்களற்ற பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட தீயணைப்புத் துறையும் தயாராகி விட்டது.
தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் எனலாம். மக்களின் பட்டாசு ஆசைகளை மேலும் தூண்டும் வகையில் சந்தையில் பலப் புதிய ரக பட்டாசுகள் ஆண்டுதோறும் அறிமுகப் படுத்தப் படுகின்றன.
பட்டாசுகள் வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளும் நடக்கத் தான் செய்கின்றன.
கடந்த ஆண்டுகளில்...
கடந்த 2010-ல் தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று 157 தீ விபத்துகள் நிகழ்ந்தன. 2011-ம் ஆண்டில் அது 665 ஆகவும், 2012-ல் 911 ஆகவும் அதிகரித்தது. கடந்த ஆண்டு 908 விபத்துகள் நடந்துள்ளன.
சென்னையில் அதிகம்...
மற்ற மாவட்டங்களைவிட சென்னையில்தான் அதிக அளவில் தீ விபத்து நடக்கிறது. நாம் கவனமாக செயல்பட்டால் 95 சதவீத தீ விபத்து களை நிச்சயம் தவிர்த்து விடலாம் என தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர்.
அசம்பாவிதங்களைத் தடுக்க...
இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி அன்று பட்டாசுகள் ஏற்படும் தீவிபத்துகளால் பெரும் அசம்பாவிதங்கள் நிகழாமலிருக்க, அன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
மேலும், தீபாவளிப் பண்டிகையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் விஜயசேகர் கூறுகையில், ‘சென்னையில் 33 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு விபத்து ஏற்படும் பகுதிகள் என 54 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
50 டேங்கர் லாரிகள்...
இந்த இடங்களில் ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து நீர் நிரப்பப்பட்ட 50 டேங்கர் லாரிகளும் தயார் நிலையில் வைக்கப்படும்.
கூடுதல் வீரர்கள்...
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 10 தீயணைப்பு வண்டிகளும், 200 வீரர்களும் கூடுதலாக வரவழைக்கப்பட உள்ளனர்.
விடுமுறை இல்லை...
தீபாவளி தினத்தன்று தீயணைப்பு வீரர்கள் ஒருவருக்குகூட விடுமுறை கிடையாது. விடுமுறையில் இருப்பவர்களும் பணிக்கு திரும்பி வரவேண்டும்.
700 பேர்...
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் உள்ள பகுதியில் 3 வண்டிகளும், ஜவுளி மற்றும் இனிப்பு கடைகள் உள்ள பகுதியில் 3 வண்டிகளும் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டிருக்கும். சென்னையில் 700 பேர் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அவசர எண்...
தமிழகம் முழுவதும் 302 நிலையங்களில் 6,801 வீரர்கள் தீயணைக்கும் பணிக்கு தயார் நிலையில் இருப்பர். தீ விபத்து ஏற்பட்டால் 101,102 என்ற எண்களுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.