ரயில்களுக்கான 'முன்பதிவில்' இனிமேல் அரை டிக்கெட் இல்லை- 5 முதல் 12 வயதினருக்கும் முழு கட்டணம்!
டெல்லி: ரயில்களுக்கான முன்பதிவில் 5 முதல் 12 வயது வரையிலானோருக்கு 'அரை டிக்கெட்' என்ற முறையை ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில்களில் முன்பதிவின் போது தற்போது 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு டிக்கெட் இல்லை. 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் என பாதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது இந்த முறையில் ரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்படுகிறது.
இனிமேல் அவர்களுக்கு முழு டிக்கெட் வழங்கப்படும். முன்பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் இதற்கான திருத்தம் செய்யப்படுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.
அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணிப்போர் தங்களது 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் பெறலாம். அதில் மாற்றம் செய்யப்படவில்லை. இத் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.