ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை என நிரூபிக்க பாடுபடும் சசிகலா தரப்பு
ஜெயலலிதாவை ஆணிக்கட்டையில் அடித்து ஓட்டை இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும்போது திரவம் எல்லாம் ஓட்டை வழியாக வெளியே வந்திருக்கும். எனவே அதற்கான வாய்ப்பே இல்லை என்று சசிகலா தரப்பு வக்கீல் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை யாரும் அடிக்கவில்லை என்றும் அவர் நலமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நிரூபிக்க சசிகலா தரப்பு படாதபாடுபடுகிறது.
ஜெயலலிதாவிற்கு எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷையனிடம் செய்த குறுக்கு விசாரணையின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும், ஜெயலலிதாவை ஆணிக்கட்டையில் அடித்து ஓட்டை இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும்போது திரவம் எல்லாம் ஓட்டை வழியாக வெளியே வந்திருக்கும் என்று டாக்டர்கள் கூறியதாகவும் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை ஆணிக்கட்டையால் அடித்து தள்ளிவிட்டு மயக்க நிலையில் அப்பல்லோவிற்கு கொண்டு வந்தார்கள் என்று பொன்னையன் உள்ளிட்ட பலரும் கூறினர். 75 நாட்கள் அப்பல்லோவில் நடந்தது என்ன என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை.
மரண மர்மம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் புகார் கூறவே நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள், டாக்டர்கள், போயஸ்தோட்டத்தில் பணி செய்தவர்கள் என பலரும் சாட்சியம் அளித்தனர். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் ஜெயலலிதாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று நிரூபிக்க சசிகலா தரப்பு படாத பாடுபடுகிறது.
ராம மோகன் ராவ் சாட்சியம்
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நல்ல சுயநினைவுடனேயே இருந்தார் என்றும் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ராம மோகன் ராவ் கூறியுள்ளார். யாராவது அடித்திருந்தால் அதை என்னிடம் கூறியிருப்பார் ஜெயலலிதா என்றும் ராம மோகன் ராவ் கூறியிருந்தார். இது யாரையோ காப்பாற்றும் முயற்சி என்று முதல்வர், அமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.
கிருஷ்ணபிரியா, சுதாசேஷையன்
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில், குறுக்கு விசாரணைக்காக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், அரசு டாக்டர் சுவாமிநாதன், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உடற்கூறு இயல் துறை தலைவர் டாக்டர் சுதா சேஷையன், அப்பல்லோ மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் சத்யபாமா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ரமணன், ஜெயலலிதா வீட்டில் சமையல் வேலை செய்து வந்த ராஜம்மாள், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர் வந்திருந்தனர்.
சுதாசேஷையன் சாட்சியம்
குறுக்கு விசாரணையில் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷையன் , கடந்த 5.12.2016 நள்ளிரவு 11.30 மணிக்கு எம்பாமிங் செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஜெயலலிதாவின் திசுக்களை பார்க்கும்போது, 15 மணி நேரத்துக்கு உள்ளாக மரணம் நடந்திருக்கும் என்று குறுக்கு விசாரணையில் கூறியதாக ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
உறுதியான சாட்சியம்
ஜெயலலிதா அடித்து கொல்லப்பட்டு இறந்துபோன பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும், இறந்துபோன ஜெயலலிதாவின் உடலை நீண்டகாலமாக அவர்கள் வைத்து இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்கும் வகையில் டாக்டரின் சாட்சியம் அமைந்து இருக்கிறது. டிசம்பர் 5, 2016 அன்று ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளார் என்பதை சாட்சியமாக உறுதி செய்துள்ளார் என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
ஓபிஎஸ் முன்னிலையில் கருவி அகற்றம்
டிசம்பர் 5ஆம் தேதியன்று அன்று வந்த எய்ம்ஸ் டாக்டர்கள் இனி உடலில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அவரது ஈ.சி.ஜி. ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது என்று சொன்னதன் அடிப்படையில், அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன் ராவ், தம்பிதுரை, முக்கிய அமைச்சர்கள் எல்லோருடைய முன்னிலையிலும் அன்று இரவு எக்மோ கருவி அகற்றும் முடிவு எடுக்கப்பட்டதாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நலமாக இருந்தார்
3.12.2016 அன்று அப்பல்லோ வந்த எய்ம்ஸ் டாக்டர்கள், ஜெயலலிதாவின் இதயம் நன்றாக உள்ளது என்று கையெழுத்துபோட்டு கொடுத்துள்ள ஆவணத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம். அதன் அடிப்படையில் அன்று ஜெயலலிதாவின் இதயம் நன்றாக இருந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
அடிக்கவேயில்லை
ஆணிக்கட்டையால் அடிக்கப்பட்டிருந்தது என்று சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எம்பாமிங் செய்த டாக்டரும், அதுபோன்று எதுவும் இல்லை. ஆணிக்கட்டையில் அடித்து ஓட்டை இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும்போது திரவம் எல்லாம் ஓட்டை வழியாக வெளியே வந்திருக்கும். எனவே அதற்கான வாய்ப்பே இல்லை என்று வெங்கட்ராமன் கூறியதாக ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.
ராஜா செந்தூர் பாண்டியன்
எக்மோ கருவியை 5.12.2016 அன்று அகற்றும்போது தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்ததாக ராமமோகன ராவ் தெரிவித்து இருந்தார். இதுவரை 22 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து இருக்கிறோம். இன்னும் மீதம் இருக்கும் சாட்சிகளையும் தாமதமின்றி குறுக்கு விசாரணை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
நடந்தது என்ன?
ஆக மொத்தத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் வெளிநாட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயற்சி நடைபெற்றதாகவும் ராம மோகன் ராவ் கூறியுள்ளார். இதை மறுக்கும் முதல்வர் தரப்பு , அவர் யாரையே காப்பாற்ற முயற்சி செய்வதாக கூறி உள்ளனர்.
எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்க முயற்சி செய்கிறது சசிகலா தரப்பு. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கு முன்பு நடந்தது என்ன என்று விசாரணை முழுவதும் முடிந்த பின்னர் தெரியவரும்.