என்கவுண்ட்டர் அச்சம்.... ரவுடி பினு போலீசிடம் திடீர் சரண்!
என்கவுண்ட்டருக்கு அஞ்சி ரவுடி பினு சென்னை போலீசிடம் திடீரென சரணடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி பினு இன்று திடீரென அம்பத்தூர் போலீசில் சரணடைந்தார். போலீஸ் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே ரவுடி பினு போலீசில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
சென்னையின் முக்கிய ரவுடிகளில் ஒருவரான பினு கடந்த 6-ந் தேதி தமது பிறந்த நாளை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை வரவழைத்து சென்னை அருகே மலையம்பாக்கத்தில் கொண்டாடினார். அங்கு பிறந்த நாள் கேக்கை வீச்சரிவாளால் வெட்டி பரபரப்பை கிளப்பியிருந்தார் பினு.
அப்போது அதிரடியாக சுற்றி வளைத்த போலீசார் 76 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால் ரவுடி கும்பலின் தலைவனான பினு உட்பட 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் தப்பி ஓடினர்.

சிக்கிய கூட்டாளிகள்
இவர்களை கடந்த ஒரு வாரமாக போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பினுவின் கூட்டாளிகள் அடுத்தடுத்து ஆங்காங்கே சிக்கியும் வருகின்றனர்.

என்கவுண்ட்டர் அச்சத்தால் சரண்
இந்த நிலையில் இன்று திடீரென பினு சென்னை அம்பத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசாரின் என்கவுண்ட்டருக்கு அஞ்சியே பினு போலீசில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்கேப்பான ராதா
சென்னையில் வலம் வரும் மற்றொரு ரவுடியான அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனை பிறந்த நாளுக்கு வரவழைத்து போட்டுத் தள்ள பினு திட்டமிட்டிருந்தார். ஆனால் ராதாகிருஷ்ணன், பினு பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்லாமல் தப்பிவிட்டார்.

போலீஸ் விசாரணையில் பினு
தற்போது போலீசிடம் சரணடைந்துள்ள பினுவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பினு இதுவரை செய்த கொலைகள், அவருக்கு ஆதரவாக இருக்கும் பிரமுகர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications