தாமஸ் பாண்டியன்... ஜோசப் விஜய்... சைமன் சீமான்... மதவாத பாசிசத்தை கக்கும் பாஜக தலைவர்கள்!
தங்களை விமர்சித்தால் அவர்களுக்கு ஒருமத முத்திரை குத்தும் பாசிச போக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது பாஜக.
சென்னை: இந்திய அரசியல் இதுவரையில்லாத மிக மோசமான மதவாத பாசிசத்தை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் பேரபாயத்துக்குரியது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் எதிர்கருத்துகள், விமர்சனங்களை முன்வைப்போர் உயிருடன் நடமாட முடியாத நிலைதான் இருக்கிறது. ஊடகத்துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசின் தலையீட்டைப் பார்க்க முடிகிறது.
ஆங்கில ஊடகங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், மத்திய அரசுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் என்பதற்காகவே வேட்டையாடப்படுகிற அறிவிக்கப்படாத அவசர நிலைப்பிரகடனம் இருக்கிறது.
தனிமைப்படுத்தும் முயற்சி
தமிழக பாஜக தலைவர்களோ இதை இன்னொரு பாசிச வடிவத்தில் கையாளுவது பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை விமர்சிப்பவர்கள் அனைவரையுமே ஒரு மத அடையாள சாயம் பூசி அவர்களை தனிமைப்படுத்துவது என்பதை யுக்தியாக வைத்திருக்கிறது தமிழக பாஜக.
தமிழிசையின் விமர்சனம்
தமிழக அரசியலில் நீண்டகாலம் தா.பா. என்றும் தா. பாண்டியன் எனவும் அறியப்பட்ட மூத்த தலைவர். முதுபெரும் இடதுசாரி தலைவரான தா.பா. இப்போது பாஜக மீது என்ன விமர்சனம் வைத்தாலும் அவர் ‘தாமஸ் பாண்டியன்'; அவர் ஒரு கிறிஸ்தவர் அப்படித்தான் பேசுவார் என அவருக்கும் மத அடையாளம் பூசுகின்றனர் பாஜகவினர். தமிழக பாஜக தலைவர் தமிழிசைதான் இதை தொடங்கி வைத்தவரும் கூட.
கிறிஸ்துவர் முத்திரை
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைக்கு மேடை ஜாதி- மதங்களை விட்டு ‘நாம் தமிழராக' வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறார். ஆனால் அவரையும் சைமன் என்கிற சீமான் என முத்திரை குத்துகிறது பாஜக குரூப்.
விஜய்க்கும் முத்திரை
இப்போது நடிகர் விஜய் மெர்சல் படம் மூலம் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் போலித்தனங்களை அமபலப்படுத்திவிட்டதால் அலறுகிறது பாஜக. உடனடியாக ஜோசப் விஜய் என்கிற கிறிஸ்தவ முத்திரையை குத்தி அவர் அப்படித்தான் பேசுவார் என்கிறது பாஜக கோஷ்டி.
இந்துத்துவா வேலை
திருமுருகனை டேவிட் திருமுருகன் என முத்திரை குத்தியது. இதேபோல் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், திராவிட இயக்க சித்தாந்தத்தை ஏற்று திமுக பேச்சாளராக இருக்கிறார். ஆனாலும் டிவி விவாதங்களில் அவரை சாகுல் ஹமீதான பிரித்தே முத்திரை குத்துகிறது இந்துத்துவா கோஷ்டி. இப்படி விமர்சிப்பவர்கள் எல்லோரையும் மத அடையாளத்துடன் முத்திரை குத்தி நச்சு பாசிசத்தை தமிழகத்தில் பாஜகவினர் விதைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல.. மதச்சார்பின்மை பூமியான தமிழகத்துக்கு பேராபத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதே ஜனநாயகவாதிகளின் அச்சம்.