கூவத்தூர் ரகசியம் பற்றி பேசிய கருணாஸுக்கு குறியா? தூசி தட்டப்படும் புகார்கள்!
போலீசார் தற்போது கருணாஸை குறிவைத்துள்ளனராம்.
Recommended Video
சென்னை: திமுகவின் மாதிரி சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று கூவத்தூர் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என பேசிய எம்.எல்.ஏ. கருணாஸ் மீதான பழைய புகார்கள் தூசு தட்டப்படுவதாக ஆளும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் மாதிரி சட்டசபை கூட்டத்தை நடத்தினார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் வரும் என்றால், கூவத்தூர் ரகசியத்தைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்க மாட்டேன்' எனக் கூறியிருந்தார். கருணாஸின் இந்தக் கருத்து குறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், " ராமநாதபுரம் மாவட்டம் உள்பட சில தொகுதிகளில் சசிகலாவுக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.
தனி ஆவர்த்தனம்
இதை மனதில் வைத்துத்தான், தொடக்கத்தில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார் கருணாஸ். ஒருகட்டத்தில், தினகரன் ஆதரவு இருந்தால்தான் சமுதாய வாக்குகள் கிடைக்கும் என்பது தவறான நிலைப்பாடு. என்னுடைய சமுதாய வாக்குகள் அனைத்தும் எனக்கே வந்து சேரும். இதற்கு சசிகலா குடும்பத்தின் தயவு தேவையில்லை' என்பதைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கினார்.
ஸ்டாலினுடன் நெருக்கம்
'வரக்கூடிய தேர்தலில் தி.மு.க அணியில் இருந்தால் வெற்றி வாய்ப்பு உறுதி' எனக் கணக்குப் போட்டவர், ஸ்டாலினுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.
இதே அணுகுமுறையில்தான் தமிமுன் அன்சாரியும் இருக்கிறார்.
மேற்கு மாவட்ட லாபி
தனியரசுவும் சூழலுக்கு ஏற்ப செயல்பட முடிவெடுத்திருக்கிறார். மேற்கு மாவட்ட லாபியைப் பகைத்துக் கொண்டால், வெற்றி வாய்ப்பு கடினம் என்பதை தனியரசு உணர்ந்து வைத்திருக்கிறார். அதனால்தான் சில விஷயங்களில் மௌனம் சாதிக்கிறார்.
கைது செய்யப்படுகிறார் கருணாஸ்?
இப்போது அரசை நேரடியாக விமர்சித்துப் பேசி வருகிறார் கருணாஸ். 'கூவத்தூர் ஆப்ரேஷனில் அவர் பெற்றுக் கொண்ட பணத்தைப் பற்றிக் கட்சி நிர்வாகிகளிடம் சொல்லவில்லை' என கூறி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பே இரண்டு துண்டுகளாகச் சிதறியது. இந்தப் பணம் குறித்துப் பேசிய கருணாஸ், ' தேர்தல் செலவுக்கு வாங்கிய கடனுக்கு இந்தப் பணத்தை ஈடுகட்டிவிட்டேன். என்னிடம் வேறு எந்தப் பணமும் இல்லை' எனக் கூறியதாகத் தகவல் வெளியானது. கருணாஸ் மீது அவர் கட்சி நிர்வாகிகள் கூறிய பழைய புகார்களையும் காவல்துறை அதிகாரிகள் தூசி தட்டி வருகின்றனர். அவரையும் அவரது அமைப்பில் உள்ள சிலரையும் வளைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் கருணாஸ் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.