30 ரூபாய் செலவில் “பிளாஸ்டிக் ஆதார் கார்ட்”- தமிழக இ-சேவை மையங்களில் வாங்கிக்கோங்க!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் ரூபாய் 30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையமும் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள், 50 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு பொது இ-சேவை மையமும், மதுரை மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு மையமும் என மொத்தம் 333 மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.
ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைத்தவர்கள் அல்லது ஸ்மார்ட் கார்ட் அளவில் பெற விரும்பினால் பொது இ-சேவை மையத்தில் ரூபாய் 30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கண்விழி, கைரேகை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையத்துக்கு சென்று, ஒப்புகை சீட்டின் பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.
இதற்கு ரூபாய் 40 கட்டணம் பெறப்படுகிறது. ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் அட்டை பெறலாம். இதற்கு கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்படும். தமிழகத்தில் எந்த பகுதியை சேர்ந்தவரும், ஏதாவது ஒரு பொது இ-சேவை மையத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 806 பேரும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 753 பேரும் பிளாஸ்டிக் அட்டை பெற்றுள்ளனர். தினமும் 5 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.