விதியை மீறி மீன்பிடித்த படகுகளுக்கு ஒரு மாதம் மீன்பிடிக்க தடை.. அதிகாரிகள் அதிரடி!
தூத்துக்குடியில் விதியை மீறி மீன்பிடித்த படகுகளுக்கு மீன்பிடிக்க ஒரு மாதம் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி: கடலில் விதியை மீறி மீன்பிடித்த படகுகளுக்கு மீன்பிடிக்க ஒரு மாதம் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் 200க்கும் அதிகமாக விடைப்படகுகள் உள்ளன. இந்த படகுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதி இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலில் மீன்பிடி குறைவாக இருப்பதால் இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு படகு மீனவர்கள் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என கூறி கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.
165 படகுகள் தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு தேவையான பொருட்களுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது உத்தரவை மீறிய செயல் என்பதால் இந்த 165 படகுகளுக்கும் அதிகாரிகள் ஒரு மாதம் கடலில் மீன்பிடிக்க அதிரடி தடை விதித்தனர்.
காலை விசைப்படகுகள் திரும்பி வரும் கால்வாயின் குறுக்கே இரும்பு ரோப் மூலம் தடுப்பு அமைத்தனர். இதனால் விசைப்படகுகள் கால்வாய் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்ட சக மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் மீன்வளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.