கந்துவட்டி தொல்லையால் தேனியில் தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை - தொடரும் கந்துவட்டி விபரீதம்
கந்துவட்டி கொடுமையால் தேனியில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி : கந்துவட்டி கொடுமை காரணமாக தேனி மாவட்டத்தில் கணவன், மனைவி இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மீண்டும் தொடரும் கந்துவட்டி தற்கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் வசித்து வந்த தம்பதியினர் வீரணன், பாப்பாத்தி. இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். முதியவர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சில ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், இரண்டே முக்கால் லட்சத்திற்கும் மேல் வட்டியுடன் அசலும் கட்டியும் விடாமல் அவர் தொல்லை செய்ததாகவும் தெரிகிறது. மேலும் குடியிருக்கும் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை காலி செய்யக்கோரி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக உடல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து போடி காவல்துறை துணைக்காணிப்பாளார் பிரபாகரன், சின்னமனூர் காவல் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.