4 குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறேன்.. கொடநாட்டில் கொலையான காவலாளி மனைவி கண்ணீர்
கணவர் கொலை செய்யப்பட்ட பின்னர் 4 குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதால் தனக்கு கொடநாடு நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எஸ்டேட் காவலாளி மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண்குழந்தை என 4 குழந்தைகளை வளர்க்க கஷ்டப்படுகிறேன் எனக்கு கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் நிவாரணம் அணிக்க வேண்டும் என்று கொல்லப்பட்ட ஓம் பகதூர் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர், 52 கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
கொலை, கொள்ளையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 10 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். மற்றொரு நபரான சயான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பின்னர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஓம் பகதூர் நேபாள நாடு பிம்போகாரா அருகே உள்ள சலாம் கிராமத்தை சேர்ந்தவர். கொடநாடு எஸ்டேட்டில் 13 ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்.
ஓம் பகதூருக்கு 3 பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கொலையான காவலாளி ஓம்பகதூரின் மனைவி ஹிம்கலிதபா,45. கணவரின் பி.எப். பணத்திற்காக கையெழுத்துபோடுவதற்காக கொடநாடு வந்த அவர்,
அதிகம் சோகத்துடன் தனது துயரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
எனது கணவர் ஓம்பகதூர் கடந்த 13 ஆண்டுகளாக கொடநாடு எஸ்டேட்டில் தான் வேலை செய்து வந்தார். எங்களுக்கு யசோதா,21, குமாரி,15, ஹிரா, 8 ஆகிய 3 மகள்களும், ரமேஷ்,12 என்ற மகனும் இருக்கிறான்.
இத்தனை ஆண்டுகாலமாக கணவர் அனுப்பிய பணத்தை வைத்தே குடும்பம் நடத்தி வந்தேன். இப்போது அவர் இல்லாமல் போனதால் மிகவும் சிரமமாக இருக்கிறது. குழந்தைகளை பராமரிக்க கடும் சிரமமாக உள்ளது.
பிஎப் பணம் பெண் குழந்தைகளின் திருமணத்திற்குக் கூட போதாது எனவே கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் எனது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.