ஸ்ரீரங்கத்தை விட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குறைந்த வாக்குப் பதிவு.. அ.தி.மு.க. மீது உச்ச அதிருப்தி?
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை விட சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குறைந்த அளவு வாக்குகளே பதிவாகி இருப்பது ஆளும் அண்ணா தி.மு.க.வை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அண்ணா தி.மு.க. அரசு மீதான பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்திருப்பதே இந்த வாக்குப் பதிவு குறைந்ததற்கு காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க, திமுக, மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் களமிறங்கினர். பாரதிய ஜனதாவை தே.மு.தி.க. ஆதரித்தது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்தது.
ஸ்ரீரங்கத்தில் 81.79%
ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதி என்பதால் ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்கள் பட்டாளமே களமிறங்கி வேலை பார்த்தது. எதிர்பார்த்தது போலவே வரலாறு காணாத வகையில் 81.79% வாக்குகள் பதிவானது. அதிமுக முகாம் அலாதியான மகிழ்ச்சியடைந்தது. அண்ணா திமுகவே இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
ஜெ.வே போட்டியிட்ட ஆர்.கே. நகர்
ஸ்ரீரங்கத்தை விட ஆர்.கே.நகர் தொகுதிதான் அண்ணா தி.மு.க.வின் கவுரவத்துக்கு சவால்விடுகிற தொகுதி. ஏனெனில் இங்கு அண்ணா தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவதே அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஜெயலலிதா. அதுவும் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டு தேர்தலை எதிர்கொள்கிறார் என்பதும் முக்கியமான ஒன்று.. இதனால் தமிழகம் முழுவதும் இருந்தே அதிமுகவினர் களமிறக்கப்பட்டு வீதி வீதியாக, வீடு வீடாக கேன்வாஸ் செய்தனர்.
களமிறங்கிய அமைச்சர்கள்
ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்கள் பட்டாளமும் வழக்கம் போல களமிறங்கியது. இதற்கும் மேலாக பகிரங்கமாக ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகள் தேர்தல் விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டன. அதுவும் இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, தேமுதிக, காங்கிரஸ்,. மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பாஜக என எந்த கட்சியுமே போட்டியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டது.
74% மட்டுமே..
அதே நேரத்தில் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கடந்த தேர்தல்களைப் போல 'கரன்சி' வெள்ளமாக தங்களை நோக்கிப் பாயவில்லையே என்ற புழுக்கமும் பொதுமக்களிடத்தில் இருந்தது. இந்த நிலையில்தான் 27-ந் தேதியன்று நடைபெற்ற வாக்குப் பதிவு அண்ணா தி.மு.க.வை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது மொத்தம் 74.4% வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை குறைவான வாக்குகளே பதிவாகி இருப்பதை அதிமுக மேலிடம் ரசிக்கவில்லையாம்.. கடந்த 2011ஆம் ஆண்டு இத்தொகுதியில் 72.72% வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு தோல்வி?
ஆனால் எதிர்க்கட்சிகளோ சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆளும் அண்ணா திமுகவுக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் அவசியம்தான் என்றும் கூறுகின்றன.. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவே போட்டியிட்டும் ஏன் வாக்குப் பதிவு குறைந்தது என விசாரித்ததில் ஆளும் அண்ணா திமுக மீதான அதிருப்தி அலை விஸ்வரூபமெடுக்க தொடங்கியிருக்கிறது என்கின்றனர் அரசியல்பார்வையாளர்கள். என்னதான் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வென்றாலும் அவரே போட்டியிட்டும் குறைவான வாக்குப் பதிவுகள் என்பது அக்கட்சிக்கு ஒரு தோல்விதான் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அரசியல்பார்வையாளர்கள்.