ஊட்டியில் 0 டிகிரி செல்சியசுக்கு குறைந்தது வெப்ப நிலை! வெள்ளை மழை பொழிகின்றது
ஊட்டி: ஊட்டியில் நேற்று குறைந்தபட்சமாக 0 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றதால் மக்கள் கடும் குளிரில் ஆட்டம் கண்டுவருகின்றனர்.
நீலகிரியில் கடந்த நவம்பர் மாதம் முதல் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. அவ்வப்போது மழை பெய்ததால் சில நாட்கள் பனி பொழிவு இன்றி மிதமான காலநிலை நிலவியது. இம்மாத துவக்கத்தில் இருந்து பனியின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது. பனி அதிகரிப்பால், மாவட்டத்தில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகியுள்ளன.

பனியில் தேயிலை செடிகள் முற்றிலும் கருகாமல் இருக்க தென்னை ஓலைகள் மற்றும் தாவை எனப்படும் செடிகளை கொண்டு மூடி வைத்து வருகின்றனர். சில விவசாயிகள் தேயிலை செடிகளை கவாத்து செய்தனர். மேலும், மலை காய்கறிகளை பனியில் இருந்து காக்க காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்பிரிங்லர் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள அலங்கார செடிகள் மீது கோத்தகிரி மலர் செடிகளை கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் நேற்று உறைபனியின் தாக்கம் மற்ற நாட்களை விட சற்று அதிகமாக காணப்பட்டது. கடந்த 13ம் தேதி ஊட்டியில் முதல் முறையாக 0 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை சென்றது.
அதன்பின் உறைபனியில் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று, மீண்டும் ஊட்டியில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியசிற்கு சென்றது. இதனால் குதிரை பந்தைய மைதானம், தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகள் வெள்ளை போர்வை போர்த்தியதை போல காணப்பட்டன.
சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் இதனை கண்டு ரசித்தனர். பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications