பட்ஜெட்டில் ஏதுமில்லை ஜீரோதான் சொல்வது எதிர்கட்சிகள்: சூப்பர் என்கிறார் சரத்குமார்…
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்களோ அறிவிப்புகளோ எதுவுமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது ஒரு ஜீரோ பட்ஜெட் என்று கருத்து கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் இந்த பட்ஜெட்டினை சரத்குமார் பாராட்டியுள்ளார்.
வைகோ ஏமாற்றம்
தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்களோ, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற அறிவிப்புகளோ எதுவும் இடம் பெறவில்லை. இந்த நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும், கடந்த நான்கு ஆண்டு காலமாக அறிவிக்கப்பட்டவைதான்.
பசுமை புரட்சி
காவல் துறைக்கு 5568.8 கோடி ரூபாய்; வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 6613 கோடி;அதிமுக அரசு விவசாயத் துறைக்கு அளித்துள்ள முக்கியத்துவம் எத்தகையது என்பதைக் காட்டுகிறது.
கடந்த காலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற ஆரவார அறிவிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை?
வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க வேளாண் இயதிரமயமாக்கும் திட்டம், குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் போன்றவை வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன.
தொழிலாளர்கள் ஏமாற்றம்
கடந்த நான்கு ஆண்டுகளில் 31,206 கோடி ரூபாய்க்குத் தொழில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதனால் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்பதையும் அரசு விளக்க வேண்டும்.
அந்நிய நிறுவனங்களான நோக்கியா, பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுபற்றி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
சாத்தியமாகுமா?
இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் பின்தங்கி உள்ள தமிழ்நாட்டில் ஒற்றைச்சாளர அனுமதி மூலம் இனி தொழில்துறை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லப்படும் எனறு முதல்வர் கூறுவது எப்டி சாத்தியமாகும் என்று தெரிவிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அதிமுக அரசு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
2011 இல் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, மாநிலத்தின் கடன் ஒரு இலட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நான்கு ஆண்டுகளில் அரசின் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதுதான் நான்கு ஆண்டு கால அதிமுக அரசின் சாதனை ஆகும்.
மக்களுக்கு பயனில்லை
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. வருமானத்திற்காக டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ள அரசு, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை மற்றும் மணல் கொள்ளை மூலம் பல இலட்சம் கோடி ரூபாய் தமிழக அரசின் கருñலத்துக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்பட்டதற்கு ஊழல்களும், அரசு நிர்வாகத்தின் முறைகேடுகளும்தான் காரணம் என்பதை உணரவில்லை. அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை!
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ''பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. வரி விதிப்புகள் இல்லை என்றால் வருமானம் இருக்காது. வருமானம் இல்லாவிட்டால் வளர்ச்சி திட்டங்களை எவ்வாறு மேற்கொள்ள முடியும்'' என்றார்.
ஜீரோ பட்ஜெட்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ''இந்த பட்ஜெட்டின் மூலம் தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் இது ஜீரோ பட்ஜெட்'' எனக் கூறியுள்ளார்.
சரத்குமார் பாராட்டு
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ''எந்தவித வரி விதிப்பும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், பல்வேறு வரி சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பது, மகளிர், குழந்தைகள் நலனுக்கு தேவையான நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கப்படத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் சிறந்த பட்ஜெட்'' எனக் கூறியுள்ளார்.