சேரலைன்னா போங்க.. 2 குழுக்களையும் கலைச்சிடுங்க.. எங்களுக்கு ஒன்னும் நஷ்டமில்ல.. ஓபிஎஸ் ஆவேசம்
இரு அணிகளும் சேரவில்லை என்றால் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட 2 குழுக்களையும் கலைத்துவிட்டு போய்விடுங்கள். எங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
திண்டுக்கல்: பழனிச்சாமி அணி ஓபிஎஸ் அணி ஆகிய இரண்டு அணிகளும் இணைவதற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுக்களை கலைத்துவிட்டு போங்கள் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்கச் சொல்லியும் இதுவரை முதல்வர் பழனிச்சாமி அதனை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், இரண்டு அணிகளும் சேரவில்லை என்றால் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுக்களை கலைத்துவிட்டு போங்கள் என்றும் அப்படி செய்வதால் தங்களுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கம் இருப்பதாகக் கூறிய ஓபிஎஸ், அதிமுகவை கட்டிக்காப்பதற்கு எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்றும் அதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறிய ஓபிஎஸ், இதனை செய்ய ஈபிஎஸ் மறுத்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.