ஆறுக்குட்டி குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை.. ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் சாடல்!
ஆறுக்குட்டி விலகுவதற்காக சொல்லும் காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்ற ஓபிஎஸ் அணி கோவை எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.
கோவை : ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணித்ததால் விலகுகிறேன் என்று ஆறுக்குட்டி எம்எல்ஏ கூறுவதில் உண்மையில் இல்லை என்று அந்த அணியின் மற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
தன்னை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டியதோடு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓ.பி.எஸ். தன்னை அழைக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டதாகவும், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி தெரிவித்திருந்தார். மேலும் தான் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் இருந்து விலகுவதாகவும் கூறிய ஆறுக்குட்டி எம்எல்ஏ எடிப்பாடி அணியில் சேர்வது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்றார்.
இந்நிலையில் கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அருண்குமார், சின்னராஜ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது கூறியவர்கள் பந்தக்கால் நடும் விழாவிற்கு அழைக்கப்படவில்லை என ஆறுக்குட்டி எம்எல்ஏ தெரிவித்தது உண்மைக்கு புறம்பானது.
எங்களோடு இணைந்து செயல்பட்டவர் ஏன் இப்போது இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு முதலில் வந்தது ஆறுக்குட்டி எம்எல்ஏ கிடையாது மாணிக்கம் எம்எல்ஏ தான்.
தொகுதிக்கு இருக்கும் பிரச்னைகளுக்கு அரசிடம் கேட்டுத் தான் அனுமதி பெற வேண்டும். எதிர்க்கட்சி என்பதே தொகுதிக்கு பிரச்னை என்றால் கேட்டுப் போராடி செய்வதே அதை விட்டுவிட்டு உடனடியாக அணி தாவுவது என்ன நியாயம். அப்படித் தான் போகிறேன் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு எங்களை ஏன் குற்றம்சாட்ட வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம்.
இரண்டு அணிகள் இணைப்பு என்பது தலைமை எடுக்க வேண்டிய முடிவு. ஏனெனில் அது கொள்கை ரீதியில் தலைமைக்கழகம் எடுக்க வேண்டிய முடிவு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.