ரணகளத்திலும் ஸ்ரீ ராமானுஜரை தரிசித்த ஓ.பி.எஸ்.. சிறந்த சமூக சீர்திருத்தவாதி என புகழாரம்!
அனைத்து மக்களையும் அன்போடு நேசித்த சமூக சீர்திருத்த வாதி மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜர் என்று ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்
சென்னை: ஒரு தாய் ஒரு மக்கள் என்ற தத்துவத்தை போதித்து அனைத்து மக்களையும் அன்போடு நேசித்த சமூக சீர்திருத்த வாதி மாபெரும் மகான் ஸ்ரீ ராமானுஜர் என்று ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழா மற்றும் ராமானுஜரின் 1000வது ஆண்டு விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்ச விழா தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா, தேர் திருவிழா நடைபெற்றது. ராமானுஜரின் 1000வது திரு அவதார திருவிழாவின் 9வது நாளான 30ம் தேதி தங்கபல்லக்கில் உற்சவர் ராமானுஜர் தேர் திருவீதி நடைபெற்றது.
இதைதொடர்ந்து ராமானுஜரின் 1000வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடபட்டது. தங்க பல்லக்கில் ராமானுஜர் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் ஸ்ரீராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
|
ஓ.பன்னீர் செல்வம்
ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும் புதூரில் உள்ள ஹயக்ரீவ வித்யாஷ்ரம் பள்ளியில், ‘அற்புத ராமானுஜர்' என்ற தலைப்பில் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் கண்காட்சி, ஸ்ரீ ராமானுஜர் குறித்த தொடர் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பஜனைகள் நடைபெற்றன. இந்தக் கண்காட்சியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று பார்வையிட்டு ஸ்ரீ ராமானுஜரின் தமிழ்த்தொண்டு என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
|
ராமானுஜருக்கு புகழாரம்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக வாழ வலியுறுத்திய ஸ்ரீ ராமானுஜர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. மனித சமுதாயம் எந்தவிதமான வேறுபாடும் இன்றி ‘ஒரு தாய் , ஒரு மக்கள்' என போதித்த மிகப்பெரிய மகான் ஸ்ரீ ராமானுஜர்' என்றார்.
ஓபிஎஸ் அணியினர் வருகை
ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.பொன்னையன், மாஃபா பாண்டியராஜன், ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்.பி. அசோக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் மணிமாறன், ஓம் சக்தி சேகர், நிர்மலா பெரியசாமி, லிப்கோ நிறுவனத்தின் தலைவர் விஜயசாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உற்சாக கொண்டாட்டம்
செவ்வாய்கிழமை இரவு முழுவதும் திருவீதி உலா சென்று இன்று கோயில் வளாகம் வந்தடைந்தார்.சாத்துமுறை தீர்த்தம், கந்தபொடி சேவையுடன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஒருவரையொருவர் கந்தபொடி தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர். நள்ளிரவு ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.