வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்துக் கொள்வது செப். 1 முதல் கட்டாயம்.. அமைச்சர் அதிரடி
செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸை கட்டாயம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை: அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்துக் கொள்வது கட்டாயம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கூடுதல் தலைமை நிலைய செயலாளர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தினந்தோறும் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆலோசிக்கப்பட்டது.
உயிரிழப்புகளைக் குறைக்க..
போக்குவரத்து துறையில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும். உயிரிழப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்கான கூட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 3744 விபத்துக்களும் 309 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
9500 லைசென்ஸ் ரத்து
இதுவரை 9500 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிக்னல் தாண்டிச் செல்பவர்கள், அதிக சுமைகளை ஏற்றிச் செல்பவர்கள் எனச் சாலை விதிகளை மீறிய 9500 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரிஜினல் கட்டாயம்
செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை அனைத்து வாகன ஓட்டிகளும் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் போது, ஜெராக்ஸ் காப்பியைக் காட்டி ஏமாற்றிவிடுகின்றனர். அதனால் இந்தக் கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான சாலைகள்
இதுபோன்ற நடவடிக்கையால் சாலை விபத்து எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் தமிழகத்தை போலச் சாலை வசதி உள்ள மாநிலங்களே இல்லை என்று அமைச்சர் கூறினார்.