வெள்ளையப்பன் கொலை வழக்கு: பன்னா இஸ்மாயிலிடம் விசாரணை
சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்ட பன்னா இஸ்மாயில் திங்களன்று வேலூர் சிறைக்கு மாற்றபட்டார். ஜெயில் ஆஸ்பத்திரியில் உள்ள தனி அறையில் அடைக்கபட்டார்.
வேலூர் சிறையில் இருந்து பன்னா இஸ்மாயிலை செவ்வாய்கிழமை மதியம் 12.40 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட்டு சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வேலூர் பாலாற்றங் கரையில் படுகொலை செய்யபட்ட இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை சம்மந்தமாக பன்னா இஸ்மாயிலை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.
பன்னா இஸ்மாயிலிடம் 48 மணி நேரம் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் பன்னா இஸ்மாயிலை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றனர்.
வேலூர் ஓட்டேரியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பன்னா இஸ்மாயிலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சிபிசிஐடி அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டது மற்றும் தீவிரவாதிகளுக்கு யாராவது உதவி செய்தார்களா? தமிழகம், ஆந்திர பகுதிகளில் பதுங்கியிருந்த விவரங்கள், தலைமறைவாக உள்ள அபுபக்கர் சித்திக் குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீசார் சேகரித்து வருகின்றனர்.