தண்ணீர், மின்சாரம் இல்லை.. பள்ளிகளை அவசர கதியில் திறப்பதா? பெற்றோர் கொந்தளிப்பு
இயல்பு நிலை திரும்பாமலேயே சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகளைத் திறக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளை அவசர கதியில் இன்று திறந்ததற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத பேரழிவை வர்தா புயல் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்துவிட்டு சென்றுள்ளது வர்தா புயல்.

பள்ளி, கல்லூரி வளாகங்கள் அனைத்தும் மரங்கள் சாய்ந்து வனப் பகுதிகளாகிவிட்டன. அத்துடன் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீரும் இல்லை... மின்சாரமும் இல்லை..தொலைத் தொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பின்னரும் இன்னமும் இயல்பு நிலைக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட மக்கள் திரும்பவில்லை. பல இடங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மின்சாரமும் தண்ணீரும் இல்லாத நிலையில் பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்பதுதான் பெற்றோர் கேள்வி. ஏன் இந்த அவசரகோலத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்? அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்பதை வெளிப்படுத்தவா இந்த நடவடிக்கை என்பதும் பெற்றோர் கேள்வி.












Click it and Unblock the Notifications