முக்கியச் செய்தி: இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவரானார் பாரிவேந்தர் மகன் ரவி!
சென்னை: பாரிவேந்தரின் மகனும் இப்போது அரசியல் தலைவராகி விட்டார். அப்பா பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவராக பாரிவேந்தர் மகன் ரவியை தேர்வு செய்துள்ளனர்.
பாஜக கூட்டணியில் இருக்கும் குட்டிக் கட்சி இந்திய ஜனநாயகக் கட்சி. இக்கட்சியின் தலைவராக இருக்கிறார் பாரிவேந்தர். இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் அதிபர் ஆவார். அது மட்டுமல்லாமல் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார்.
பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் 5வது பொதுக்குழு கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வி கல்லூரி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக பாரிவேந்தரின் மகன் ரவி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதில், இந்திய ஜனநாயக கட்சியில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்க்கவும் அவர்களை வழி நடத்தவும் ஒரு இளம் தலைவர் வேண்டும் என்ற நோக்கத்தில் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் தலைவரான ரவி கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஏற்கனவே வாங்கி ரெடியாக வைத்திருந்த பெரிய பெரிய சைஸ் மாலைகளை எடுத்து ரவிக்கு அணிவித்தனர். அதன் பிறகு பாரிவேந்தரும், மற்ற தலைவர்களுமாக சேர்ந்து ரவியை கையைப் பிடித்து அழைத்துச் சென்று மேடையில் உட்கார வைத்தனர். பிறகு கைத்தட்டல்கள் அரங்கத்தின் கூரையைப் பிளந்தன.
இந்தப் பொதுக்குழுவில் சில தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.
- தமிழ்நாட்டில் ரயில் சேவை இல்லாத பெரம்பலூர் மாவட்டத்துக்கு ரயில் பாதைகள் அமைத்து புதிய ரயில் விட வேண்டும் என்று பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் பாரிவேந்தர் கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று வரும் நிதியாண்டில் இதனை செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று பாரிவேந்தரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இதற்காக பாரிவேந்தருக்கு பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.
- இந்தி, சமஸ்கிருதம் மொழிகளுக்கு கொடுக்கும் உயர் அந்தஸ்தை தமிழ் மொழிக்கும் கொடுத்து தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் சென்று வர மொழிப் பிரச்சினை தடையில்லாமல் இருப்பதற்கு இந்தியை விரும்பி படிக்கிற மாணவர்களுக்கு போதிய வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியனின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
- மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு 2 புதிய மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பது உள்பட மொத்தம் 20 தீர்மானங்களை நிறைவேற்றினர்.