நான் வர மாத்தேன், நீ போ... அடம் பிடிக்கும் ப.சி, கா.சி!
சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகார்கள் அடங்கிய மனுவைக் கொடுக்கத் தயாராகி வரும் காங்கிரஸ் குழுவில் இடம் பெற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக அரசு மீது சில வாரங்களுக்கு முன்பு பாமக சார்பில் ஆளுநரிடம் ஒரு ஊழல் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் அதிமுக அரசின் பல்வேறு ஊழல்களைப் பட்டியலிட்டு ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்திலும் பாமக வழக்குப் போட்டுள்ளது.
இந்த நிலையில் இதேபோல காங்கிரஸும் ஆளுநரைச் சந்தித்து புகார் மனு தர முடிவெடுத்துள்ளது. இந்தப் புகார்களை தற்போது தயாரித்து வருகிறார்களாம். அதிமுக அரசு மீதான ஊழல் புகார்களுக்கான முகாந்திரம் தொடர்பான தகவல்களை திமுகதான் சேகரித்து காங்கிரஸ் வசம் கொடுப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.
ஆளுநரிடம் புகார் மனு தரும்போது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாராம் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் மட்டுமல்லாமல் அத்தனை முக்கிய தலைவர்களையும் அழைத்துச் செல்லவும் அவர் விரும்புகிறாராம்.+
ஆனால் ப.சிதம்பரம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள தயங்குகிறாராம். அமைதியாக ஒதுங்கியிருக்கவும் அவர் விரும்புகிறாராம். இதையடுத்து அகமது படேல் மூலமாக அவரிடம் பேசிப் பார்த்துள்ளது காங்கிரஸ் மேலிடம். ஆனாலும் சம்மதம் தெரிவிக்கவில்லையாம் சிதம்பரம் இன்னும்.
அதேசமயம், ஒரு வேளை ப.சிதம்பரம் போனாலும் கூட அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கண்டிப்பாக வர மாட்டார் என்று கார்த்தி தரப்பு உறுதிபடக் கூறுகிறதாம்.