நிற்காமல் செல்லும் அரசு பேருந்துகள்: சாலை மறியலில் குதித்த மக்கள்
நெல்லை: நெல்லை அருகே பேருந்துகள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் ஆத்திரத்தி்ல் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர், ஆலடிப்பட்டியில் கலை கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. இவற்றில் சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன.

நல்லூர், ஆலடிப்பட்டி, காசிபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரிக்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் வருகின்றனர். இதே போல் இங்கிருந்து தென்காசி, திருநெல்வேலிக்கு தினமும் ஏராளமானோர் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சரியான அரசு
போக்குவரத்து இல்லாததால் தனியார் வேன்களை நம்பி உள்ளனர்.
நல்லூர் விலக்கு பகுதியில் அனைத்து அரசு பேருந்துகளும் நின்று செல்ல கோரியும், நல்லூர் ஒரு வழி சாலையை அகலப்படுத்தக் கோரியும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் சரியான பதில் இல்லை.
இதனால் பொறுத்துப் பொறுத்த பார்த்த பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை நல்லூர் சாலையில் அதிரடியாக திரண்டனர். அங்கு அவர்கள் மறியலில் குதித்தனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சங்கு, எஸ்.ஐ. கார்த்திக் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications