திமுக, அதிமுகவை வீழ்த்துவோம்: மக்கள் நல கூட்டணி மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு
மதுரை: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விரட்டுவோம் என்று மதுரையில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் நல கூட்டணி மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் கூறியுள்ளார்.
ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணியின் சார்பில் மதுரை ஒத்தக்கடையில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், தி.மு.க., அ.தி.மு.க.,வை வீழ்த்துவோம். பிரிட்டிஷ் ஆட்சியை விரட்டியது போல், இரு கட்சிகளையும் விரட்டுவோம். இயற்கை வளங்களை கொள்ளையடித்ததில் இரு கட்சிகளுக்கும் பங்கு உண்டு. இது பற்றி கருணாநிதியும், ஜெயலலிதாவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஊழல் கட்சிகளை முறியடிக்க வேண்டியது நமது முக்கியமான கடமை
முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், 20 ஆண்டுகளில் இயற்கை வளம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என சகாயம் அறிக்கை அளித்துள்ளார். இயற்கை வளங்களை கொள்ளையடித்ததில் தி.மு.க. , அதிமுக.,விற்கும் பங்கு உண்டு. தி.மு.க.,வையும் அ.தி.மு.க.,வையும் கமிஷன் கட்சி என அழைக்க வேண்டும்.
மக்கள் நலக்கூட்டணி, தமிழக மக்களின் 40 ஆண்டு கால தவத்தின் பயனாகும். தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் வேறுபாடு இல்லை. இரு கட்சிகளும் தமிழக அரசியலை வியாபாரமாக்கிவிட்டன. தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்.
மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.