விடுதலை கோரி பேரறிவாளன் மத்திய அரசுக்கு கடிதம்… தொடரும் போராட்டம்
26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலைச் செய்ய வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களின் விடுதலை இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும், மத்திய அரசும் மாநில அரசும் இவர்களின் விடுதலை விஷயத்தில் சற்று மெத்தனமாகவே நடந்து கொள்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் தொடர்ந்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். பேரறிவாளனும் மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். என்றாலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்று கூறி அனைத்து நடவடிக்கைகளும் கிடப்பில் இருக்கின்றன.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பேரறிவாளன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பேரறிவாளன் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அண்மையில், வேலூர் சிறையில் இருக்கும் போது, சக கைதி ஒருவரால் பேரறிவாளன் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.