அரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணிணிமயமாக்க கோர்ட் உத்தரவு!
தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்களை வரும் 6 மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களை வரும் 6 மாதத்திற்குள் கணிணிமயமாக்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 20 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 தாலுகா மருந்தகங்கள் உள்ளன.
இதில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் புறநோயாளிகளும், 20 லட்சம் உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு தேவையான மருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
மருந்து, மாத்திரைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள 7 சிகிச்சை பிரிவுகளிலும் 7 மருந்தகங்கள் உள்ளன. ஆனால் 2016 அக்டோபர் முதல் நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படவில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு மருந்து தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான நேரங்களில் உள் நோயாளிகளுக்கு கூட வெளியில் காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள் தேவையான இருப்பு வைக்கவும், அனைத்து காலி பணியிடங்களை நிரப்பவும், மருந்தகங்களை கணிணிமயமாக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசு மருத்தகங்களில் தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்கவும், அனைத்து காலி பணியிடங்களை நிரப்பவும், மருந்தகங்களை கணிணி மயமாக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகளை வரும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.