அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை மயக்குமாம் மழை...!
சென்னை: சென்னையில் தற்போது இரவு நேரத்தில் பெய்து வரும் மழையும், பகல் நேரத்தில் கண்ணாமூச்சி ஆடும் மேகமூட்டமும் அடுத்த 2 நாட்களுக்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் சென்னையில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும் கூட இரவு நேரங்களை மழை வந்து நனைத்து விட்டுப் போனது. இதனால் பகலில் புழுங்கிய மக்கள் இரவில் குளிர்ந்து போயிருந்தனர்.
இந்த மழை காரணமாக வெப்ப நிலையும் சற்று குறைந்து வருகிறது. இது அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கான அறிகுறி...
இதுகுறித்து சென்னை பிராந்திய வானிலை மைய துணை இயக்குநர் எஸ்.பி. தம்பி கூறுகையில், செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும், அக்டோபர் தொடக்கத்திலும் வெயில் படிப்படியாக குறைந்து மழைக்காலத்தின் அறிகுறி காணத் தொடங்கியுள்ளது.
ஆயத்தநிலை...
தென் மேற்குப் பருவ காலம் முடிந்து, வட கிழக்குப் பருவ காலத்தின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ளதால் இதுபோன்ற ஆயத்த நிலை ஏற்படுவது வழக்கம்தான்.
மழை சீராகும்...
வழக்கமாக பருவ காலத்தின் தொடக்கத்தில் பகலிலும், இரவிலும் மாறி மாறி மழை பெய்யும். பருவ மழைக்காலம் தொடங்கி விட்டால் மழை அளவு சீராகும். பொதுவாக வட கிழக்கு பருவ காலத்தின்போது இரவு நேரத்தில் அதிக அளவில் மழை பெய்யும்.
கூடுதல் மழைக்கு வாய்ப்பு...
அக்டோபர் மத்தியில் மழைக்காலம் தொடங்கும். இந்த சமயம் வழக்கத்தை விட கூடுதலான மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் மழைக்காலத்தை வரவேற்க முடியும்.
வடகிழக்குப் பருவ மழை...
சென்னையைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில்தான் அதிக அளவிலான மழைப் பொழிவைப் பெறுகிறது. எனவே சென்னைக்கு இது முக்கியமானதாகும்.
நம்பிக்கை...
கடந்த 1920ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் அதிக அளவிலான வெப்ப நிலையாக 39.4 டிகிரி சென்டிகிரேட் பதிவாகியிருந்தது. ஆனால் இந்த முறை அந்த அளவுக்கு வெயில் இருக்காது என்று நம்பலாம் என்றார் அவர்.