சிறை வார்டனின் மகன் அடித்துக் கொலை.. மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரை மத்திய சிறைத் துறையில் வார்டனாக பணியாற்றி வருபவரின் மகன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மீனாட்சிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த, மதுரை மத்திய சிறைத்துறையில் வார்டனாகப் பணியாற்றி வரும் நாகேந்திர பாண்டியின் மகன் சுந்தரபாண்டியன் (16). இவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று பள்ளி சென்ற சுந்தரபாண்டியனுக்கும், அவரோடு பயிலும் மற்ற மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. முடிவில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் போய் முடிந்ததாம்.
இதில் சுந்தரபாண்டியன் சக மாணவர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதனால் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மாணவர் சுந்தரபாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இறந்த சுந்தரபாண்டியனின் முகத்தில் ஆங்காங்கே காயங்கள் காணப்படுகின்றன. செல்லூர் போலீசார் மாணவர் சுந்தரபாண்டியன் இறப்புக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.