டூர் போகத்தான் மோடிக்கு ஆர்வம்... நம்ம நிலை புரியலையே... ஓபிஎஸ் தரப்பு புலம்பல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரிக்கட்ட பிரதமர் மோடி ஆர்வம் காட்டாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதிலேயே குறியாக இருக்கிறார்
சென்னை: பிரதமருக்கு நாடுநாடாக டூர் போகத்தான் ஆர்வம் இருக்கிறதே தவிர, நம்ம பிரச்சனையை தீர்க்க அக்கறையில்லையே என்ற புலம்பல்கள் ஓபிஎஸ் அணியில் கேட்கத் தொடங்கியுள்ளன.
பிரதமர் கண்டுகொள்ளாததால், தனது அணியின் நிலை குறித்தும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் மூத்த தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அதில் மிக விரிவாகவே அனைவரும் பேசியுள்ளனர்.
முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை, சசிகலா பதவி விலகச் சொன்னதால், அதிமுகவையே அவர் இரண்டாக உடைத்தார். அவருக்கு 11 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்களின் ஆதரவு இருந்தது. மேலும் அடிக்கடி பிரதமர் மோடியை சென்று சந்தித்து வந்தார்.
அதற்கு ஏற்றார்போல, தமிழக அமைச்சரவையில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதிமுக முடக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்கியது.
பீதியில் அமைச்சர்கள்
அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் பதற்றத்தில் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை அடிக்கடி சென்று சந்திக்கத் தொடங்கினார். இதனால் எடப்பாடியிடமும் பிரதமர் நெருக்கம் காட்டினார்.
தவிப்பில் ஓபிஎஸ்
இதனால், தமிழக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் இறுக்கம் விலகி, சகஜ நிலைக்கு திரும்பினர். அதேநேரத்தில், பன்னீர்செல்வம் அணியினர் தங்களது நிலைமை என்ன ஆகும் என்பது தெரியாமல் தவிக்க ஆரம்பித்தனர்.
யாருக்கும் பொறுப்புகள் இல்லை
கட்சி தங்கள் வசம் வரும் என்பதற்காக தன்னிடம் உள்ள ஆதரவாளர்களுக்கு கூட புதிய பொறுப்புக்களை கொடுக்காமல் இருந்தனர். தன் அணியில் இதுவரை யாருக்கும் பொறுப்புக்களை போடவில்லை. பொறுப்புகள் போட்டால் மாவட்ட வாரியாக வேலை செய்யலாம் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தனர்.
எடப்பாடிக்கு ஏறுமுகம்
ஆனால் அவரோ கட்சி நம் கட்டுப்பாட்டுக்குள் விரைவில் வரும் என்று கூறி வந்தார். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மாறாக எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சலசலப்பு உருவாகத் தொடங்கியுள்ளது. மூத்த தலைவர்களுக்குள்ளும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
வரவேற்பு குறைகிறது ஓபிஎஸ் அணிக்கு
இதனால் அடுத்து நம் அணியின் நிலை என்ன ஆகும் என்றும் தொண்டர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பன்னீர்செல்வம் அணிக்கு இருந்த வரவேற்பு தற்போது குறையத் தொடங்கியது. இதனால் தனது அணியின் நிலை, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது.
எடப்பாடி அரசு செல்லாது
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பாண்டியராஜன் அளித்துள்ள பேட்டியில், ‘‘கட்சியின் நிலை, அடுத்து எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து பேசினோம். எங்களைப் பொறுத்தவரை நேர்மையான, தூய்மையான அரசு அமைய வேண்டும். எடப்பாடி அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அதிமுக எங்களுக்குத்தான்
மத்திய அட்டர்னி ஜெனரல் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முக்கியமான திருப்பமாகும். நாங்கள் கட்சியை வேகமாகவும், சிறப்பாகவும் கொண்டு செல்வது குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினோம்'' என்றார்.