நாகப்பட்டிணம் தொகுதி பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன்: ஜி.கே. மணி அறிவிப்பு
நாகை: நாகை தொகுதியில் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் நாகை(தனி) தொகுதிக்கான வேட்பாளரை பாமக அறிவித்துள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
பாமக-பாஜக இடையே உடன்பாடு ஏற்படும் முன்பு விழுப்புரம் தொகுதி வேட்பாளராக வடிவேல் அறிவிக்கப்பட்டார். பின்னர் அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் தற்போது நாகை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1952ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி சண்முகவேல், பொன்னம்மாள் தம்பதியின் மகனாக பிறந்தார் வடிவேல் ராவணன். அவர் எம்.ஏ, பி.எல்., சமஸ்கிருதத்தில் பட்டயம் வாங்கியுள்ளார். தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த அவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் வசித்து வருகிறார்.
அவர் தமிழ்நாடு தேர்வாணையம், தலைமைச் செயலகக் கல்வித் துறை அலுவலகம், சாத்தூர் கனரா வங்கி ஆகியவற்றில் எழுத்தராகப் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்த அவர் திருச்சி வானொலி நிலைய செய்தி அறிவிப்பாளராக பணியாற்றினார்.
1989ம் ஆண்டு பாமக உறுப்பினரான அவர் மதுரை (மேற்கு) மாவட்டச் செயலாளர், தத்துவ அணிச் செயலாளர், கலை இலக்கிய அணித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். பல ஆண்டுகளாக கட்சி பணியாற்றும் அவர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து பாமக மாநில துணை பொதுச் செயாலளராக உள்ளார்.
அவர் 1991ம் ஆண்டு நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் 1996ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.