அப்பாடா.. கூட்டணி கட்சிகளுக்கு ராமதாஸ் ஓட்டு கேட்டுட்டாரப்பா!
சென்னை: 'ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்' என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கேட்ட தொகுதிகள் கிடைக்காத காரணத்தால் கூட்டணியைவிட்டு வெளியேறிவிடுவோம் என்று அவ்வப்போது பூச்சாண்டி காட்டி வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புணியின், அன்பு கட்டளையை ஏற்று பாஜ கூட்டணியில் தொடர சம்மதித்தார்.
ஆனால் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்யும் அவர், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எட்டிக்கூட பார்த்தது இல்லை. இதனால் கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, பாஜக கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பாமக போட்டியிடும் தொகுதிகளில் களப்பணியாற்ற ஆர்வம் காண்பிக்கவில்லை.
இந்நிலையில், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக எதையுமே பேசாத ராமதாஸ் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும், மத்தியில் காங்கிரசும் இழைத்த துரோகங்கள் மற்றும் கொடுமைகளுக்கு கணக்கு தீர்க்கும் நாள்தான் வரும் 24ம் தேதியாகும்.
தமிழகத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் பாரதிய ஜனதா தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இணைந்து தேிய ஜனநாயக கூட்டணி என்ற வலிமையான அணியை உருவாக்கியிருக்கின்றன.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் வலுவான ஆட்சியை அமைத்து, அதன்மூலம் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தை சீரழித்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் ஆகும்.
தமிழக மக்களின் விருப்பமும் இதுதான். தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஓர் அணி உருவாகாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த மக்கள் இப்போது நாம் அமைத்துள்ள கூட்டணியை மனதார வாழ்த்தி வரவேற்கின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நமது அணிக்கு வெற்றி என்ற பயிரை தமிழக மக்கள் விளைவித்துள்ளனர்.
அதை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது.
தமிழகத்தில் நீலகிரி நீங்கலாக 38 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழகத்தின் நலனுக்காக நாம் நினைப்பதையெல்லாம் சாதிக்க முடியும்.
அத்தகைய வெற்றிக்காக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருதாய் மக்களாக கைகோர்த்து உழைக்க வேண்டும். ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும் என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் வெற்றி ஒன்றே இலக்கு என நினைத்து பாடுபட வேண்டும்.
குறிப்பாக, பாஜக, தேமுதிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒருபடி கூடுதலாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல புதுவையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.கே.ஆர்.அனந்தராமனையும் வெற்றி பெறச் செய்வதற்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாமகவினர் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சார கூட்டம் எதிலும் உரையாற்றுவது குறித்து அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.