நெடுஞ்சாலைகளை மாற்றம் செய்து, வீழ்த்தப்பட்ட மது அரக்கனுக்கு உயிர்கொடுத்து விடக்கூடாது : ராமதாஸ்
மதுக்கடைகளை மீண்டும் கொண்டுவருவதற்காக நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றும் முடிவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுக்கடைகளை மீண்டும் கொண்டுவருவதற்காக நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றும் முடிவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகளே மது வணிகர்களின் நலன் கருதி அதில் இருந்து தப்புவதற்கான வழிகளைக் கற்றுத் தருவது மிகப்பெரிய மோசடி என்றும் ராமதாஸ் சாடியுள்ளார்.
கடந்த 31ஆம் தேதியுடன் நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் கேரள உட்பட பல மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாககூறப்படுகிறது.
இந்நிலையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மாநில அரசுகள் மீண்டும் மதுக்கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமாதஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. நடத்திய சட்டப்போராட்டத்தின் பயனாக நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனையை சுப்ரீம் கோர்ட்டு தடை செய்திருப்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டைபோட மது ஆலை அதிபர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்த முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகளும் ஆதரவுகரம் நீட்டுவது கண்டிக்கத்தக்கது.
சாதாரண சாலைகளாக மாற்ற ஒப்புதல்
மது விற்பனை தடைக்கு சுப்ரீம் கோர்ட்டு மூலம் விலக்கு பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்ட மது வணிகர்கள், பிரதமர் மூலமாக விலக்கு பெற முயன்றதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் அலுவலகம் நெடுஞ்சாலைகளை சாதாரணமான சாலைகளாக வகைமாற்றம் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் கண்டிக்கத்தக்கதாகும்.
உயிரிழப்புகளிலிருந்து தப்ப முடியாது
மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள சாலைகள் சாதாரண சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றத் திட்டமிட்டுள்ளன. நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு விட்ட நிலையில், நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக மாற்றுவதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் இருந்து வேண்டுமானால் தப்பிக்கலாம், உயிரிழப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது.
மத்திய மாநில அரசுகளே மோசடி
மக்கள் நலன் கருதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகளே மது வணிகர்களின் நலன் கருதி அதில் இருந்து தப்புவதற்கான வழிகளைக் கற்றுத் தருவது மிகப்பெரிய மோசடியாகும். இதையே முன்னுதாரணமாகக் கொண்டால் நாளை கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைக்கூட, அவற்றின் பெயர்களை மாற்றிச் செய்துவிட்டு தப்பிக்கும் நிலை ஏற்படாதா? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதை தடுக்கும் தார்மீக உரிமை அரசுக்கு இருக்குமா?.
மது விலக்குக்கு அரியவாய்ப்பு
பா.ம.க. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் விஷயம் ஒன்று தான், நெடுஞ்சாலை மது விற்பனைக்கு தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக கிடைத்துள்ள அரிய வாய்ப்பு ஆகும். இந்த வாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்து, வீழ்த்தப்பட்ட மது அரக்கனுக்கு உயிர்கொடுத்து விடக்கூடாது. அதற்காக செய்யப்படும் முயற்சிகளை அறப்போராட்டங்களின் மூலமாகவும், சட்டப்போராட்டத்தின் மூலமாகவும் பா.ம.க. முறியடிக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.