கூட்டணிக்காக சில "சமரசங்களை" செய்ய பா.ம.க. தயார்.... இறங்கி வரும் அன்புமணி
சென்னை: வருகிற சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில சமரசங்களை செய்ய பா.ம.க. தயாராக இருப்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளரும் தருமபுரி மக்களவை தொகுதி எம்.பியுமான அன்புமணி இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்று கட்சியாக பா.ம.க. திகழும். மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணியில் சேருவதற்காக சில சமரசங்களை செய்துகொள்ள தயாராகவும் இருக்கிறோம்.
பா.ம.க. தலைமையை ஏற்க தயாராக இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
தற்போது தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். அ.தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தே.மு.தி.க. செயல்படாத எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே பா.ம.க. மாற்று சக்தியாக விளங்கும்.
பா.ம.க.வின் செல்வாக்கு சில மாவட்டங்களில் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திருச்சி, திருநெல்வேலி, கோவை மாநாடுகள் மூலம் பா.ம.க.வின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் தற்போது எந்த கட்சியும் கூட்டணி பற்றி நிலையான கருத்தை கொண்டிருக்கவில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும்.
ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. மாறாக அவர் மட்டுமே மாற்றம் அடைந்து வருகிறார். தமிழகத்தில் தற்போது உள்ள பிரச்னைகளுக்கு தி.மு.க.வும் பொறுப்பு. பிப்ரவரி 14-ல் சென்னையில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.












Click it and Unblock the Notifications