லோக்சபா தேர்தல்: தேமுதிகவின் அதிரடியில் வெலவெலத்துப் போன பாமக!!
சென்னை: பாரதிய ஜனதா அணியில் தேமுதிக அதிரடியாக மேற்கொண்ட நடவடிக்கையால் பா.ம.க. மூச்சுவிடமுடியாமல் அதாவது அந்த கூட்டணியில் தொடர்ந்து இருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக அணியில் மதிமுக, தேமுதிக, பாமக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டாலும் தொடக்கம் முதலே யாருக்கு எந்த தொகுதி என்பதில்தான் பெருங்குழப்பமோ குழப்பம்!
வேட்பாளர்களை அறிவித்த கேப்டன்
தொகுதிப் பங்கீட்டில் பாஜக அணியில் இழுபறி முடிவதாக இல்லை என்ற நிலையில்தான் திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரம், வேட்பாளர்கள் அறிவிப்பு என அமர்க்களப்படுத்தினார்.
ராசி எண் 5
இதனால் அதிர்ந்து போன பாஜக தலைமை விஜயகாந்தை சமாதானப்படுத்த பார்த்தது. ஆனால் விஜயகாந்தின் ராசி எண் 5 என்று சொல்லி எங்களுக்கு நீங்கள் ஒதுக்கிய திருவள்ளூரில்தான் பிரசாரம் தொடங்குகிறோம் என நியாயப்படுத்தியது.
திருச்சிக்கும் வேட்பாளர்
திருவள்ளூர், வட சென்னை, திருச்சி, நாமக்கல், மதுரை என 5 தொகுதிகளை தாமே எடுத்துக் கொண்டு வேட்பாளர்கள தேமுதிகவே அறிவித்துக் கொண்டது. திருச்சி பற்றி முடிவே எடுக்காத நிலையில் எப்படி தேமுதிக வேட்பாளரை அறிவிக்கலாம் என கேட்டது பாஜக.
அப்ப திருப்பூர் கொடுங்க..
அதற்கு திருச்சி எங்களுக்குத்தான் முடிவானது. அதைப் போய் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்க, அப்படியானால் திருப்பூரை எங்களுக்குத் தாருங்கள் என கொக்கி போட்டது தேமுதிக தரப்பு.
சேலம் கபளீக்ரம்
இந்நிலையில் பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் சுதீஷ் கேட்டுக் கொண்டதால் சேலத்தையும் தாரை வார்த்துக் கொடுத்தது. சேலம் தேமுதிக.வுக்குப் போனதில் பாமக செம அதிருப்தி. ஆனால் பாஜக அதை கண்டு கொள்ளவில்லை.
பாமக கடுப்பு
இதில் கோபமடைந்த பாமக திடீரென கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் கூட்டணியில் பெரும் குழப்பமே வெடித்தது. மேலும் சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று தொகுதிகளும் பா.ம.க-வுக்குத்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.
மீண்டும் வேதாளம்..
விழுப்புரம், திருவண்ணாமலையை ஏற்கெனவே விட்டுக் கொடுக்க பாமக முன்வந்த நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கை மர ஏறிய கதையானது. இதனால் பாமகவா? தேமுதிகவா? எந்த கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது பாஜக.
பாமகவை கழற்றிவிட முடிவு
ஒரு கட்டத்தில் பாமக போனால் போகட்டும் என்ற நிலைக்கும் வந்தது பாஜக. இதனை புரிந்து கொண்டவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமது கூட்டங்கள் அனைத்திலும் மோடிக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்து கூட்டணியை உறுதி செய்து கொண்டார்.
கையை பிசையும் அன்புமணி
பாமகவைப் பொறுத்தவரையில் அன்புமணி ராமதாஸ்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க துடிக்கிறவர். ஆனால் நிலைமை கைமீறிப் போய்விட்ட நிலையில் கையை பிசைவதுதான் அன்புமணிக்கு இப்போதைய நிலையாகிக் கிடக்கிறது.
மண்டை காய்ந்த டெல்லி தலைவர்கள்
தமிழக பாஜக அணியில் பிரளயமாக வெடித்த கூட்டணி குழப்பங்களைப் பார்த்து மேலிட பொறுப்பாளர் முரளிதர்ராவ், தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் மிரண்டு போயிருக்கிறார்களாம்.. இப்படியெல்லாம் கூட்டணி கட்சிகள் இருக்குமா என நினைத்து..