ஏங்க, பத்திரம் வாங்கிட்டு வரச் சொன்னேனே, வாங்கியாந்தீங்களா?.. ராமதாஸ் கலகல!
ஆரணி: பாமக வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடும். இதை பத்திரத்தில் எழுதித் தரத் தயார் என்று கூறிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனக்கு அருகில் இருந்தவரிடம், பத்திரம் வாங்கி வரச் சொன்னேனே எங்கே என்று கேட்டு கலகலப்பூட்டினார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் தினுசு தினுசாக தயாராகி வருகிறது. பலர் கூட்டணிக்கு அலை பாய்கிறார்கள். சிலர் கூட்டணியே தேவையில்லை என்கிறார்கள். சிலரது நிலை புரியாத புதிராக உள்ளது.
இந்த நிலையில் பாமக தான் தனித்துத்தான் போட்டியிடப் போவதாக தொடர்ந்து கூறி வருகிறது. மறுபக்கம் பாஜக கூட்டணியில் அதற்கு தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதாக ஒரு பேச்சும் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஆரணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். அதிலிருந்து சில பகுதிகள்...
5 அணிகள் உறுதி
வரும் தேர்தலில் தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் பாமக தலைமையில் தனித்துப் போட்டி என உறுதி செய்துள்ளோம். இதை பத்திரத்தில் எழுதிக்கொடுக்கக் கூட தயாராக உள்ளேன் (அருகிலிருந்து கட்சிக்காரர்களைத் திரும்பிப் பார்த்து பத்திரம் வாங்கி வந்தீர்களா என கேட்டார் ராமதாஸ்).
அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு
தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பொதுமக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களுக்கு இன்னல்கள்
குறிப்பாக மீனவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் 9,988 கொலைகளும், 98 ஆயிரத்திற்கு மேல் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளன. இப்படித்தான் சீரழிந்துள்ளது தமிழகம்.
சாதி சங்க மாநாடுகளில் தவறில்லை
சாதி சங்கங்கள் தேர்தலின்போது ஆங்காங்கே தங்களது கொள்கைகளை முன்னிறுத்தி மாநாடுகளை நடத்துகின்றன. எங்களை பொறுத்தவரை அது தவறில்லை.
நாங்கள் பலமானவர்கள்
திமுக மற்றும் அதிமுக தனித்துப் போட்டி என அறிவிக்கவில்லை. நாங்கள் தனித்துப்போட்டி என அறிவித்துள்ளோம். அந்தளவுக்கு நாங்கள் பலமாக உள்ளோம்.
நாங்களே மாற்று அணி
அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளையும் சேர்த்து போட்டியிடுகிறோம். எல்லா கட்சிகளுக்கும் எங்கள் கட்சியே மாற்று அணியாக செயல்படுகிறது என்றார் ராமதாஸ்.
அப்படி ஒரு கூட்டணி இருக்கா...?
வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி குறித்த கேள்விக்கு அப்படி ஒரு கூட்டணி இருக்கா என்று திரும்பக் கேட்டார் ராமதாஸ்.