தன் பிள்ளைக்கு என்றால் துடிக்கிறார்கள்.. சேரன் மீது கவிஞர் சல்மா தாக்கு!
திருவண்ணாமலை: சினிமாவில் காதல் காட்சிகளை காட்டுகிறார்கள். ஒரு இயக்குநர் சமீபத்தில் தன் மகள் ஒருவனை காதலித்துவிட்டாள் என அவளை மீட்க போராடினார். இதே இயக்குநர் தான் சினிமாவில் காதல் காட்சிகளை வைத்தார். அடுத்தவர் பிள்ளை எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என சினிமா எடுத்தவர்கள் தன் பிள்ளைக்கு என வரும் போது துடிக்கிறார்கள். சினிமா மூலம் சமூகத்தை சீரழிக்கிறார்கள் என்று கவிஞர் சல்மா கூறியுள்ளார்.
காதல் கதைகள் பலவற்றைப் படமாக எடுத்த இயக்குநர் சேரன், தனது மகள் காதல் விவகாரத்தில் கடுமையாகப் போராடிய கதையைத்தான் இப்படி சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் சல்மா.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்விக் குழுமத்தின் சார்பில் நடந்த படிக்கற்கள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதுதான் சல்மா இப்படி தனது மனக் குமுறலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கல்வியும், வாழ்க்கையும் என்ற தலைப்பில் சல்மா பேசினார். அவரது பேச்சிலிருந்து...
நம்பிக்கை நட்சத்திரங்கள்
உங்களைப்போன்ற மாணவர்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள். கல்வி இருந்தால் வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
எனக்குக் கிடைக்கவி்ல்லை இந்தக் கல்வி
உங்களுக்கு கிடைக்கும் கல்வி என்னைப் போன்றவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே நிஜம்.
பெண்களை படிக்க வைப்பதில்லை
நான் பிறந்த இஸ்லாமிய சமூகத்தில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. பையன்களை 12 வகுப்போடு நிறுத்திவிடுகிறார்கள் என்றால் பெண் பிள்ளைகளை 13, 14 வயதிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.
13 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டனர்
நான் 8வது படிக்கும் போது 13 வயதிலேயே என் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டார்கள். நான் படிக்கும் காலத்தில் தூங்கச்செல்லும் போது ஒரு நாள் மருத்துவராக வேண்டும் என்றும், மறுநாள் இன்ஜினியராக வேண்டும் என்றும், அதற்கடுத்த நாள் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு காண்பேன்.
கனவுகள் கருகி விட்டன
ஆனால், எதுவுமே நடக்காமல் எனது கனவுகள் கருகிவிட்டன. நான் கடைசியில் கவிஞராகவிட்டேன்.
17 வயதிலேயே பாஸ்போர்ட்டுடன் சவூதிக்கு பயணம்
இஸ்லாமிய சமூகத்தில் பையன்களுக்கு 17 வயது ஆனவுடன் பாஸ்போட் எடுத்து சவுதிக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு அவன் கூலி வேலை செய்துவிட்டு திரும்பி வருவான். இதுதான் இஸ்லாமிய சமூகத்தின் நிலை.
இன்று விழிப்புணர்வு வந்துள்ளது
கல்வி குறித்த விழிப்புணர்வு இன்று பெற்றோர்களுக்கு அதிகம் வந்துள்ளது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
மகளை மீட்கப் போராடிய இயக்குநர்
சினிமாவில் காதல் காட்சிகளை காட்டுகிறார்கள். ஒரு இயக்குநர் சமீபத்தில் தன் மகள் ஒருவனை காதலித்துவிட்டாள் என அவளை மீட்க போராடினார். இதே இயக்குநர் தான் சினிமாவில் காதல் காட்சிகளை வைத்தார்.
அடுத்தவர் பிள்ளை எப்படியும் போகட்டும்...
அடுத்தவர் பிள்ளை எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என சினிமா எடுத்தவர்கள் தன் பிள்ளைக்கு என வரும் போது துடிக்கிறார்கள். சினிமா மூலம் சமூகத்தை சீரழிக்கிறார்கள்.
ஆட்டிப்படைக்கும் பேஸ்புக்
பேஸ்புக் தற்போது நம்மை ஆட்டிப்படைக்கிறது. தமிழ் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு குறைபாட்டை சீர் செய்து சாதனை படைத்து பரிசு பெற்றுள்ளார்.
திட்டமிடும் பருவம் இது
இந்த மாணவ பருவத்தில் நாம் எதை நோக்கி நடைபோட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை நோக்கி திட்டமிட வேண்டும் அதற்கான பருவம் இதுதான்.
கற்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
கல்வி கற்றவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்புதான். குஜராத் மாநிலம் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் உள்ள மாநிலம். குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டபோது பணக்காரர்கள், தொழிலதிபர்கள் சரிந்து போனார்கள். ஆனால் கல்வியாளர்கள் மட்டும் தான் தங்களது பழைய நிலைக்கு திரும்பினார்கள். காரணம் கற்றவர்களுக்கு எங்கு சென்றாலும் மதிப்பு இருப்பதால்தான். மாணவர்கள் பறவையை போல் திட்டமிட்டு இலக்கை நோக்கி பயணமாக வேண்டும்.
பெண்களைப் பாதுகாக்க உறுதி பூணுங்கள்...
அதேபோல் நாட்டில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மாணவர்கள் அதனை உணர்ந்து பெண்களை பாதுகாக்க, சமஉரிமை தர வாழ்க்கையில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் கவிஞர் சல்மா