சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு.. துப்பு கொடுத்தால் ரூ. 5 லட்சம் பரிசு...!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை துப்பு துலங்கவில்லை. இதையடுத்து துப்பு கொடுப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவது நினைவிருக்கலாம்.
டிஜிபி அலுவலகம் புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மே மாதம் 1-ந் தேதி அன்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெங்களூர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்.4, எஸ்.5 ஆகிய பெட்டிகளில் குண்டு வெடித்த வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல்வேறு தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பயணிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
இதை தவிர கூடுதலாக பொதுமக்களிடம் இருந்தும் கூடுதல் தகவல்களை பெற சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏதாவது புகைப்படங்கள் இருந்தாலோ? வீடியோ காட்சிகள் இருந்தாலோ? அவற்றை பொதுமக்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கொடுக்கலாம்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் மட்டும் அல்லாது குறிப்பிட்ட ரயில் புறப்பட்ட இடம், வழி நெடுகிலும், அந்த ரயிலில் நின்ற இடங்களிலும், ஏப்.30-ந் தேதி அன்றோ, மே 1-ந் தேதி அன்றோ, ஏதாவது புகைப்படங்கள் எடுத்திருந்தாலோ, வீடியோ காட்சிகள் பதிவு செய்திருந்தாலோ, மர்ம நபர்கள் பற்றிய தகவல்கள் ஏதேனும் கிடைத்திருந்தாலோ, அவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கலாம்.
குண்டுவெடிப்பு குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கோ? அல்லது பிடிப்பதற்கோ? தேவையான தகவல்களை கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும். பெயர் முகவரி, தெரிவிக்க விரும்பாதவர்கள் கூட தகவல்கள் இருந்தால் அதை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு போனில் தெரிவிக்கலாம். முக்கிய தகவல்கள் கொடுப்பவர்களின் பெயர் விவரம் ஏதுவும் வெளியிடப்படமாட்டாது. ரகசியமாக வைக்கப்படும்.
உரிய துப்பு கொடுத்து பரிசு பெறுபவர்களின் விவரங்கள் கூட ரகசியமாக வைக்கப்படும். குற்றவாளிகள் தொடர்பான ஏதாவது தகவல்களோ? புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் 7708654202 என்ற செல்போன் எண்ணிலும், 044-22502500, 044-22502510 ஆகிய தொலைபேசி எண்களிலோ பேசி உரிய தகவல்களை கொடுக்கலாம். ‘இ-மெயில்' மூலம் தகவல்கள் தெரிவிக்க விரும்புகிறவர்கள் [email protected] என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.