தூக்க கலக்கத்தில் விபத்து நடந்து விட்டது... கேரளா போலீசில் வாக்குமூலம் அளித்த சயன்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் சயன், தூக்க கலக்கத்தில் விபத்து நடந்துள்ளதாக கேரளா போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை : கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக காவல்துறையினரில் சந்தேக லிஸ்டில் உள்ள சயன் பாலக்காடு அருகே சாலை விபத்தில் சிக்கியதால் அவரது மனைவி, மகள் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சயன் சிகிச்சை பெற்று வருகிறார். கேரளா போலீசார் விபத்து குறித்து சயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு முறை சயனையிடம் விசாரணை மேற்கொள்ள கேரள போலீசார் முயன்ற போது மருத்துவ நிர்வாகம் மறுத்து வந்தது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி அனுமதியளித்ததின் பேரில் கேரளா போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் விபத்து குறித்து மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக பேசுக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 28 ஆம் தேதி பழனி சென்று முருகனை குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு சரியான தூக்கம் இல்லாததால் ஆங்காங்கே தனது காரை நிறுத்தி தூங்கியதாகவும், இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி வந்து மீண்டும் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும், பின்னர் அதிகாலையில் காரை எடுத்துக் கொண்டு திருச்சூர் செல்லும்போது விபத்து நடந்ததாகவும் பாலக்காடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளரிடம் சயன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை முதல் காத்திருந்த கேரள போலீசார்மாலையில் விசாரணையை முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்றனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போயஸ்கார்டன் மாஜி கார் டிரைவர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர் சயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருந்த நிலையில் இருவருமே ஒரே நாளில் விபத்தில் சிக்கினர். சேலத்தில் நடந்த விபத்தில் கனகராஜ் மரணமடைந்தார். கேரளா தமிழ்நாடு எல்லையில் நடந்த விபத்தில் சிக்கிய சயன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இது விபத்தா? கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வரும் நிலையில் தூக்க கலக்கத்தில் விபத்து நடந்ததாக சயன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.