மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
வள்ளியூர்: மகாபாரதத்தை பற்றி அவதூறாக நடிகர் கமல்ஹாசன் பேசினாரா? என்பது குறித்து விசாரிக்க வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரைச் சேர்ந்தவர் ஆதிநாத சுந்தரம். பக்கத்து ஊரான அஞ்சுகிராமத்தில் வியாபாரம் செய்து வரும் இவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கடந்த 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
மனுவை ஏற்றுக்கொண்ட வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் மீதான புகாரை விசாரித்து இது தொடர்பாக பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.