செங்குன்றத்தில் 10 வயது சிறுமி பலாத்காரம்: குற்றவாளியை கைது செய்ய போராடியவர்கள் மீது தடியடி
சென்னை: சென்னை செங்குன்றத்தில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்களும்,பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர் ஓம் சக்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது 10 வயது மகள் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு வருகிறாள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு காவ்யா தனது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தாள். அதிகாலையில் அவள் பாத்ரூம் செல்ல வெளியில் வந்தாள். அப்போது வாலிபர் ஒருவர் சுமதியை தூக்கிச் சென்று அங்குள்ள தைலமர தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இது பற்றி செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து கைது செய்யக் கோரி காவ்யாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திங்களன்று செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குற்றவாளியை உடனே கைது செய்யக்கோரி 2வது நாளாக நேற்றும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக செங்குன்றம், திருவள்ளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தலைமையிலான போலீசார் பொது மக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் குற்றவாளியை கைது செய்யும் வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று பொதுமக்கள் கூறவே அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து ஓடினார்கள். பின்னர் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.