ரௌடி வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலை.. சென்னையில் பரபரப்பு
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரௌடி வீட்டில் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை புளியந்தோப்பில் உள்ள ஒரு ரௌடியின் வீட்டில் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார் அசோக்குமார். 6 ஆண்டுகளுக்கு முன், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற ரௌடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அசோக்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிய அசோக்குமாருக்கு உயிரிழந்த ரௌடியின் மனைவி உமா மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கம், உமா மகேஸ்வரிக்கும் போலீஸ் அதிகாரி அசோக்குமாருக்கும் அந்தரங்க உறவாக மாறியது. இதனையடுத்து, இரவில் ரோந்து பணிக்கு செல்வதாகக் கூறிவிட்டு உமா மகேஸ்வரியுடன், அசோக்குமார் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில், ரௌடியின் மனைவி உமா மகேஸ்வரிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக அசோக்குமாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து உமா மகேஸ்வரி வீட்டிற்குச் சென்ற அசோக்குமார் கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அசோக்குமார் உமா வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். 60 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி இன்று அசோக்குமார் உயிரிழந்தார்.
இந்தத் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.