பள்ளிக்குள் ஆசிரியரை தாக்கிய சம்பவம்... அலட்சியம் காட்டிய உதவி போலீஸ் கமிஷ்னர் டிரான்ஸ்பர்
சென்னை: சென்னை கோடம்பாக்கம் லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர் பாஸ்கர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது தி.நகர் உதவி போலீஸ் ஆணையர் விஜயராகவன் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் மாற்றப்பட்டார்.
நவம்பர் 20ம் தேதி லயோலா பள்ளிக்கு ஒரு கும்பல் வந்தது. அங்கு வந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரை சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தினர். இதில் காயமடைந்த ஆசிரியர் பாஸ்கர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தன்னைக் கேலி செய்த மாணவர் ஒருவரை ஆசிரியர் கண்டித்து அடித்ததால் அவனது தந்தை அருளானந்தத்தின் உத்தரவின் பேரில் கூலிப்படை போல இந்தக் கும்பல் செயல்பட்டு வெறியாட்டம் போட்டது தெரிய வந்தது. அருளானந்தம் ரிச் இந்தியா குரூப் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், ஆசிரியர்களும், பெற்றோர்களும் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். சம்பந்தப்பட்ட கும்பலையும், அருளானந்தத்தையும் கைது செய்யக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து விரைவாக செயல்பட்ட போலீஸார் 27 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். ஆனால் அருளானந்தம் மட்டும் கைது செய்யப்படவில்லை. அவர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தி.நகர் உதவி ஆணையரை துணை ஆணையர் அசோக்குமார் இடமாற்றம் செய்துள்ளார்.
இதற்கிடையே, தலைமறைவாக உள்ள அருளானந்தத்திற்கு பெரிய இடங்களில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் கைது நடவடிக்கையிலிருந்து அவர் தப்பி வருவதாகவும் பெற்றோர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு நெருக்கமான உயர் மட்டம் அருளானந்தத்தைக் காப்பாற்றி வருவதாகவும் கூறுகிறார்கள் இவர்கள்.
திருச்சியைச் சேர்ந்த அருளானந்தம், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்திய காந்தப் படுக்கை மோசடியில் தொடர்புடையவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்ஜாமீன் கோரிக்கை
இந்த நிலையில் அருளானந்தம் மற்றும் அவரது தம்பி செபாஸ்டியன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அதில் அருளானந்தம் கூறுகையில், எனது மகனைப் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதால் தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், நானும் எனது மனைவி அருணாவும் ஒரு நிறுவனத்தை நடத்ித வருகிறோம். பல்வேறு தான தர்மங்களிலும் ஈடுபட்டு வருகிறோம். வருமான வரி கட்டுபவர்களாகவும் உள்ளோம்.
எனது மகன் பள்ளி வளாகத்தில் தமிழில் பேசியதால் ஆசிரியர் பாஸ்கர் அவனை கடுமையாக அடித்தார். இதுதொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்திலும் நான் புகார் கொடுத்துள்ளேன். ஆனால் எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனது அலுவலகத்தை போலீஸார் சோதனை என்ற பெயரில் சூறையாடியுள்ளனர். எனது பல கோடி மதிப்புள்ள கார்களைப் பறிமுதல் செய்துள்ளனர். எனது நிறுவன ஊழியர்களையும் கைது செய்துள்ளனர் என்று கூறியுள்ளார் அருளானந்தம்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி மாலதி, இதுதொடர்பாக அனைத்து விவரங்களையும் பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டு டிசம்பர் 1ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.