விஜயகாந்த் வீடு, கட்சி அலுவலகம் முன்பாக திடீர் போலீஸ் குவிப்பு.... பதறும் தேமுதிக
சென்னை: முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க தொண்டர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படும் நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதனிடையே திடீரென சென்னையில் விஜயகாந்த் வீடு மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்குமாறு விஜயகாந்த் உத்தரவிட்டார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்து கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட எதிர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனிடையே முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்ததாக விஜயகாந்த் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விஜயகாந்த் உட்பட 37 பேரை கைது செய்வதில் தஞ்சாவூர் போலீசார் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் தம்மை கைது செய்யாமல் இருப்பதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விஜயகாந்த் முன் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே விஜயகாந்த் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் ஜெயலலிதா திடீரென அறிக்கை வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீடு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போலீசார் குவிப்பு, பாதுகாப்புக்காக அல்லது விஜயகாந்த்தை கைது செய்யும் போது அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காகவா? என எதுவும் தெரியாமல் தேமுதிகவினர் விழிபிதுங்கி போயுள்ளனர்.