மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி குறித்து நீதி விசாரணை வேண்டும்: திருமாவளவன், முத்தரசன், ஜி.ரா.
மெரீனாவில் நடைபெற்ற வன்முறை திட்டமிடப்பட்டது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். போலீஸ் தடியடி குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்கள்
சென்னை: சென்னையில் கடந்த 23ஆம் தேதி வன்முறை நடைபெற்றது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
போலீஸ் தடியடியை கண்டித்து மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பில் சென்னை, மதுரை, கோவையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மெரினா கடற்கரையில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவம் திட்டமிடப்பட்டது என்று குற்றம் சாட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் மக்கள் நலக்கூட்டியக்கம் சார்பாக, இந்த வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மெரினா வன்முறை
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, 7வது நாளன்று பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதில், அப்பகுதி மீனவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். காவல்துறையினர் மிகவும் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். பொதுமக்களின் வாகனங்கள் போலீசாரால் தீவைக்கப்பட்டுள்ளது.
சமூக விரோதிகளா?
மாணவர்கள் போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள், தேச விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று கூறி பிரச்சினையை திசை திருப்புவதை மக்கள் நலக்கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இழப்பீடு தேவை
அமைதியாகப் போராடுவோர் மீது இத்தகைய தாக்குதல் கட்டவிழ்த்துப்பட வேண்டியதற்கான அவசியம் என்னவென்று தெரியவில்லை. மாணவர்களையும், பொதுமக்களையும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கியதற்காக, சென்னை மாநகர போலீஸ் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும். அத்துடன், மன்னிப்பு கேட்டு, உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் வேண்டும் என்றார்.
ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
பொதுமக்கள் மீதான போலீஸ் தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ராமகிருஷ்ணன், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் சென்னை, கோவை காவல் ஆணையர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்
முத்தரசன் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கட்டுப்பாடின்றி தாக்குதல் நடத்தி உள்ளது. காவல்துறை எழுதிக் கொடுத்ததை முதலமைச்சர் சட்டப்பேரவையில் படித்துள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காவல்துறையின் ஆட்டூழியங்கள் குறித்து இனிமே தான் முதல்வர் விசாரிக்க போகிறார் என்பது வேடிக்கையாக உள்ளது எனவும் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளார்.