திமுக- அதிமுக இடையேதான் போட்டி; பாஜகவுக்காக கழற்றிவிட்ட ஜெ..: இன்னும் புலம்பும் தா.பா.!!
சென்னை: பாரதிய ஜனதாவுடன் கை கோர்க்க அதிமுக முடிவு செய்ததால்தான் அக்கட்சியுடன் கூட்டணி அமையவில்லையே தவிர தொகுதிகள் ஒதுக்கீட்டு பிரச்சனையெல்லாம் எதுவும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 18 தொகுதிகளில் இணைந்து போட்டியிடுகின்றன.
தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தா. பாண்டியன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஒத்த கருத்துள்ள கட்சி அதிமுக
பல்வேறு பிரச்சனைகளில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அதிமுகவுக்கும் ஒத்த கருத்துதான் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தோமே தவிர தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல..

பாஜகவை விரும்புகிறார் ஜெ.
ஆனால் எதிர்பாரதவிதமாக அதிமுக தலைகீழான நிலை எடுத்துவிட்டது. ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரம் தெள்ளத் தெளிவாக அவர் பாஜகவை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

மதவாத கட்சியாகிவிடும்..
பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தால் தமிழகத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது அதிமுகவின் நம்பிக்கை. ஆனால் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் அப்படி அதிமுக செய்தால் நிச்சயமாக ஒரு மதவாத கட்சியாக முத்திரை குத்தப்படும். அதன் பின்னர் திமுகவைப் போல அதிமுகவும் வருந்த நேரிடும்.

கார்ப்பரேட்டுகள் சதி
அதிமுக- இடதுசாரிகள் கூட்டணி முறிவின் பின்னணியில் பாஜக மட்டுமே இருப்பதாக கருதவில்லை. பாஜகவுக்கே தேர்தல் அஜெண்டாவை வகுத்துக் கொடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள். அவர்கள்தான் பின்னணியில் இருந்து செயல்படுகின்றனர்.

தொகுதி பிரச்சனை இல்லை.. கொள்கை பிரச்சனை
அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கையால் பிரச்சனை இல்லை. அரசியல் கொள்கைகளால்தான் பிரச்சனை ஏற்பட்டது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் பாஜகவை தேர்ந்தெடுத்துவிட்டார். அவருடைய மனநிலையை கணிப்பது எளிதான ஒன்று அல்ல.

அவர் நினைச்சதுதான் நடக்கும்..
ஒருவேளை இடதுசாரிகளுக்கு தலா 5 தொகுதிகளையே அதிமுக ஒதுக்கியிருந்தாலும் அவர் நினைப்பதுதான் நடக்கப் போகிறது. அது அவருடைய விருப்பம்.

உணர்ச்சிவசப்படக் கூடாது
அதிமுகவுடனான கூட்டணி முறிந்த உடனேயே உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுத்துவிட முடியாது.. அது தேர்தல் களத்தில் வேண்டுமெனில் கை கொடுக்கலாம்.. ஆனால் அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பு சீர்குலைந்து போய்விடும்.

காங்கிரஸைக் கூட அதிமுக ஆதரிக்க தயங்காது
திமுகவும் அதிமுகவும் எத்தனை இடங்களைக் கைப்பற்றுகிறார்களோ அதனடிப்படையில் புதிய மத்திய அரசில் இடம்பெறுவது பேரம் பேசத்தான் போகிறது. காங்கிரஸை அதிமுக எதிர்த்தாலும் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் திமுகவை ஒதுக்க அதிமுககூட ஆதரிக்கவும் தயங்காது.

அதிமுக- திமுக இடையேதான் போட்டி
தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக- திமுக இடையேதான் முதன்மையான போட்டி. இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் 6க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறோம். இதர தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்போம்
இவ்வாறு தா. பாண்டியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications