திருமாவிற்காக ‘வாக்களிப்பு விழா அழைப்பிதழ்’ அச்சடித்து வாக்குச் சேகரிக்கும் திமுக பிரமுகர்...
சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபாத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, கிள்ளை திமுக செயலாளர் திருமண பத்திரிகை போன்று ‘வாக்களிப்பு விழா அழைப்பிதழ்' அச்சடித்து வீடு, வீடாக சென்று நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இவருக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது விரைவில் அவரது திருமண நிச்சயத்திற்கான அடையாளம் என்றும், தேர்தலில் திருமாவளவனுக்கு ஆதரவை கனையாழி சின்னம் மூலம் வழங்கி வெற்றி பெறச்செய்தால், அவர் திருமணத்திற்கு சம்மதித்து அதை ஏற்றுக்கொள்ளுவார் என கடந்த ஏப்.10-ம் தேதி சிதம்பரம் பிரசாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
வாக்களிப்பு விழா அழைப்பிதழ்...
அதனை மனதில் கொண்டு திமுகவைச் சேர்ந்த கிள்ளை பேரூர் திமுக செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான எஸ்.கிள்ளை ரவிந்திரன், திருமண பத்திரிகை போன்றே வாக்களிப்பு விழா அழைப்பிதழ் என அச்சடித்து, வீடு, வீடாக சென்று வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
வாக்காளர்களே துணை...
வாக்களிப்பு விழா ழைப்பிடஹ்ழ் எனத் தொடங்குகிறது அந்த நோட்டீஸ். மேலே வாக்காளர்களே துணை என எழுதப்பட்டுள்ளது.
உங்கள் ஓட்டு...
மேலும், அப்பத்திரிகையில், அன்புடையீர் வணக்கம், தேர்தல் ஆணைய அறிவிப்பை முன்னிட்டு ஜய வருடம் தசமி திதி சித்திரை மாதம் 15-ம் தேதி (24-04-2014) வியாழக்கிழமை அவிட்டம் நடத்திரமும், வெற்றி யோகமும் கூடிய சுபமுகூர்த்த நாளில் காலை 7 மணிக்கு மேல் மாலை 5 மணிக்குள் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோரின் ஆசி பெற்ற வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளால் ஏற்கப்பட்ட சின்னமான மோதிரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதக் கவனிக்கலையா பாஸ்...
பத்திரிக்கை அடித்து வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிக்கும் திமுகவினர் ஒரு விசயத்தை மறந்து விட்டனர். அதாவது இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் நேரம் மாலை 6 மணி வரை மாத்திட்டாங்க பாஸ்.
கூட்டணி மாமன்கள்....
அழைப்பிதழின் பின்புறத்தில் மாமன்/ மச்சான்கள் பெயர் போடப்படும் இடத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.