மத்திய அரசின் திட்டங்களை தடுக்கும் செயல்தான் தமிழகத்தில் நடக்கிறது:பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு எந்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தாலும் அதனை தடுக்கும் செயல்கள்தான் தமிழகத்தில் நடக்கிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தென்காசி: மத்திய அரசின் மூன்றாண்டு சாதனைகளை மக்களுக்கு விளக்கும் விதமாக வ.உ.சி. துறைமுகம் சார்பில் தென்காசியில் "அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்" என்ற விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்தான் எந்தத்திட்டங்கள் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லும் மனநிலை உள்ளது. தமிழகம் எதிர்காலத்தில் முன்னேற்றவிடாமல் சதித்திட்டங்கள் நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலத்தடி நீர் பாதிப்பில்லை, மாசு பாதிப்பில்லை விவசாயம் செழித்து போயுள்ளது.
ஆனால் இங்கு மட்டுமே எதிர்க்கும் மனநிலையுள்ளது. எந்த மத்திய அரசுத் திட்டத்தையும் நான் கைவிடபோவதில்லை குறுகியமான நிலைகொண்டவர்கள் ஆண்டார்கள், ஆள்கிறார்கள், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களால் எந்தப் பிரச்சினைகளுமில்லை மக்களை சிலர் அச்சுறுத்தி பயம்காட்டி வருகிறார்கள். இவர்களால் தமிழகம் கற்காலத்தை நோக்கித்தான் செல்லும். முன்னேற்ற பாதையில் செல்லாது.
கூடங்குளம் அணு உலை திட்டத்தை அப்படித்தான் எதிர்த்தார்கள் ஆனால் அந்த பகுதிக்கு கிடைக்கக்கூடிய நல்ல திட்டங்களை கேட்டுபெற முடியவில்லை. பல்வேறுத் திட்டங்களை பெற்றிருக்க முடியும் ஆனால் சிலரால் இன்னும் அந்தமக்கள் நல்ல திட்டங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 5 இடங்களை கொடுத்துள்ளனர். இதில் எந்த இடங்களை தேர்வு செய்யவேண்டும் என கட்சியின் தலைமை ஒருபக்கம், அமைச்சர்கள் ஒருபக்கம் தங்களது பகுதியில் தான் அமைய வேண்டும் என்று முயற்சிகளை செய்துவருகின்றனர்.
3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிபீட்டில் பல்வேறு சிறப்புக்களை கொண்ட மருத்துவமனை அமைய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிச்சயம் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் ஒரு இடத்தில் அமையும். இரட்டை ரயில் பாதைத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு தனது பங்கை வழங்க முன்வரவில்லை இருந்தாலும் மத்திய அரசு தங்களது முழு நிதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார்.