கட்சி சார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களில் கட்சி சார்பானவர்களை இனம் கண்டு, அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதைத் தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எழுத்தாளர் ம.வெங்கடேசனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஒரு தடவைக்கு மேல் பெயர் இருந்தவர்கள், இறந்தவர்கள் என சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர். போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும்.
வாக்குக்கு பண விநியோகம் என்பது மிகப் பெரிய சாபக் கேடாக உள்ளது. பணப்பெட்டிகள் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. காவல் துறையும், மாவட்ட நிர்வாகங்களும் விரைந்து நடவடிக்கை எடுத்து பண விநியோகத்தைத் தடுக்க வேண்டும்.
தமிழகத் தேர்தலை ஒட்டு மொத்த இந்தியாவும் ஆர்வத்துடன் கவனிக்கிறது. அரசுக்கு சார்பான காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. கட்சி சார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று கூறினார்.
மேலும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது துறை சார்ந்தே சென்னைக்கு வந்தார். மத்திய அமைச்சர்கள் இப்படியாக சென்னைக்கு வந்து செல்வது இயல்பானதாகும். இதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.
திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? திமுகவும், தேமுதிகவும் கூட்டணி அறிவிப்பு வரும்போது பார்த்துக் கொள்ளலாம். பாஜக கூட்டணியில் இன்னமும் தேமுதிக உள்ளதா என்பதை தேமுதிகதான் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.